கம்போடியா - தாய்லாந்து எல்லை பிரச்னை தீவிரமானது: வான்வழி தாக்குதல்களால் போர் பதற்றம்
பாங்காங்: எல்லை பிரச்னை தொடர்பாக, தாய்லாந்து மற்றும் கம்போடியா ராணுவ வீரர்கள் மோதிக் கொண்டனர். மேலும், வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால், இரு நாட்டுக்கும் இடையே போர் பதற்றம் உருவாகி உள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே, நீண்ட காலமாக எல்லை தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது. எல்லையில் உள்ள ஹிந்து கோவிலுக்கு, இரண்டு நாடுகளும் பரஸ்பர உரிமை கோருவதே பிரச்னைக்கு முக்கிய காரணம்.இது தொடர்பான பிரச்னை நீண்ட காலமாக இருந்தபோதும், கடந்த மே மாதத்தில் எல்லையில் மோதல் ஏற்பட்டபோது, கம்போடியா ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதுவே, இரு நாடுகளின் உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தி, தாய்லாந்தில் இருந்து காய்கறி மற்றும் பழங்கள் இறக்குமதி செய்ய கம்போடியா தடை விதித்தது. அதற்கு பதிலடியாக கம்போடியா உடனான எல்லையை தாய்லாந்து மூடியது. இந்நிலையில், எல்லை பிரச்னை காரணமாக நேற்று மீண்டும் இரு நாட்டு வீரர்களும் மாறி மாறி மோதிக் கொண்டனர். முதலில் தாய்லாந்து, போர் விமானங்கள் வாயிலாக வான்வழி தாக்குதலை நடத்தியதாகவும், அதை தொடர்ந்து கம்போடியாவும் வான்வழி தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. தாய்லாந்து மாகாணமான சுரின் மற்றும் கம்போடியாவின் ஒட்டார் மீன்ச்சே இடையேயான எல்லையில் உள்ள இரண்டு கோவில்களுக்கு அருகே நேற்று மோதல்கள் துவங்கின. ஏவுணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி, இரு நாடுகளும் தாக்குதல் நடத்தின.https://x.com/dinamalarweb/status/1948553236388216847'எப் - 16' ரக போர் விமானங்களை அனுப்பி, கம்போடியாவின் இரண்டு ராணுவ நிலைகளை அழித்ததாக தாய்லாந்து ராணுவம் தெரிவித்தது. கம்போடியா வைத்த கண்ணிவெடியில் சிக்கி ஐந்து தாய்லாந்து வீரர்கள் காயமடைந்ததாகவும் புகார் கூறியது. இந்த குற்றச்சாட்டை மறுத்த கம்போடியா வெளியுறவுத்துறை, 'தாய்லாந்து வீரர்கள் தான் முதலில் தாக்குதல் நடத்தினர்; துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது' என தெரிவித்தது. ஆனால், தாய்லாந்து ராணுவமோ, 'ஆறு கம்போடியா வீரர்கள் ஆயதங்களுடன் நுழைந்தனர். மேலும், ட்ரோன் தாக்குதல் சத்தம் கேட்டது. இதனால், பாதுகாப்புக்காக தாக்குதல் நடத்தப்பட்டது' என கூறியது. கம்போடியா நடத்திய தாக்குதல்களில், 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தாய்லாந்து கூறியுள்ளது. ஆனால், சேத விபரம் குறித்து கம்போடியா எந்த தகவலையும் வெளியிடவில்லை. கம்போடியா நடத்திய தாக்குதல்களில், 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தாய்லாந்து கூறியுள்ளது. ஆனால், சேத விபரம் குறித்து கம்போடியா எந்த தகவலையும் வெளியிடவில்லை.இந்த மோதலை தொடர்ந்து, பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், இரு நாடுகளும் தங்களின் எல்லைகளை மூடியுள்ளன. அது மட்டுமின்றி, தங்கள் நாட்டில் உள்ள துாதரக ஊழியர்கள் மற்றும் மக்களை வெளியேறும்படி இரு நாடுகளும் பரஸ்பரம் உத்தரவிட்டுள்ளன. இந்த தாக்குதல்களை தொடர்ந்து, இரு நாட்டு எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
100 ஆண்டுக்கும் மேலாக தொடரும் பிரச்னை
தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த தாய்லாந்தும், கம்போடியாவும் அண்டை நாடுகள்; 800 கி.மீ., துார எல்லையை பகிர்ந்துள்ளன. தாய்லாந்து, கம்போடியா மற்றும் லாவோஸ் எல்லைகளை ஒட்டி அமைந்துள்ள 2 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவு உள்ள பகுதி, 'எமரால்டு டிரையாங்கிள்' என்று அழைக்கப்படுகிறது. இது மலைகள் மற்றும் காடுகளால் நிறைந்தது. இந்தப் பகுதிக்கு தாய்லாந்தும், கம்போடியாவும் பரஸ்பரம் உரிமை கொண்டாடுகின்றன. கடந்த 1863 - 1953 வரை கம்போடியாவை ஆட்சி செய்த பிரெஞ்சு அரசால், 1907ல் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டன. அப்போது, 11ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான ஹிந்து - புத்த கோவில் ஒன்று, கம்போடியா எல்லைக்குள் சென்றதால், தாய்லாந்து எதிர்ப்பு தெரிவித்தது. இப்பிரச்னை, 1962ல் சர்வதேச நீதிமன்றத்துக்கு சென்றது. அதில், கம்போடியாவுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தது. இந்த உத்தரவை தாய்லாந்து ஏற்றுக் கொண்டாலும், கோவிலை சுற்றியுள்ள எல்லைகள் சர்ச்சைக்குரியவை தான் என அறிவித்தது. கடந்த 2008ல் இக்கோவிலை, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்க கம்போடியா முயற்சி செய்தது. இது,தாய்லாந்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இரு நாடுகள் இடையே மோதல் ஆரம்பமானது. 2011ல் ஏற்பட்ட மோதலில், 15 பேர் பலியாகினர். கடந்தாண்டு தாய்லாந்து - கம்போடியா எல்லையில் நட்பு பாலத்தில் நிரந்தர 'செக் போஸ்ட்' ஒன்றை தாய்லாந்து திறந்தது. இது, இரு நாடுகளிடையே நீண்டநாள் சர்ச்சைக்கு மருந்தாக பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் பிரச்னை துவங்கியுள்ளது.
கோவிலின் சிறப்பு
இரு நாடுகள் எல்லை பகுதியில் அமைந்துள்ள 'பிரேயா விஹார்' எனும் கோவில், டாங்கிரீக் மலைப்பகுதியில் 1,722 அடி உயரத்தில் அமைந்துள்ளது; 11ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. மன்னர் முதல், இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்டது. முதலில் சிவன் கோவிலாக இருந்தது; பின், புத்த கோவிலாக மாற்றப்பட்டது.