அமெரிக்காவுக்கு எதிரான விளம்பரம் நாளை முதல் நிறுத்த கனடா முடிவு
டொரான்டோ: கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் சார்பில் வெளியிட்ட விளம்பரத்தால், அமெரிக்கா - கனடா இடையேயான வர்த்தக பேச்சு முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், சர்ச்சைக்குரிய விளம்பரத்தை நாளை முதல் நிறுத்தப் போவதாக அம்மாகாண முதல்வர் டக் போர்டு தெரிவித்துள்ளார். 'டிவி' விளம்பரம்
வடஅமெரிக்க நாடான கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்தார். இதையடுத்து, கனடாவின் மிகப்பெரிய மாகாணங்களில் ஒன்றான ஒன்டாரியோ மாகாணம், அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகளால், கனடாவிற்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து அமெரிக்க மக்களுக்கு எடுத்துச் சொல்கின்ற வகையில், 'டிவி' விளம்பரத்தை வெளியிட்டது. மொத்தம், 60 வினாடிகள் உள்ள இந்த விளம்பரத்தில், அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன், 1987ம் ஆண்டு அந்நாட்டு தேசிய வானொலியில் பேசிய உரைகளில் இருந்து சில பகுதிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இதற்கு ரொனால்டு ரீகன் அறக்கட்டளை எதிர்ப்பு தெரிவித்ததுடன், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கனடாவுடன் நடத்தி வந்த வர்த்தக பேச்சுகள் அனைத்தும் முடிவுக்கு வருவதாக தெரிவித்திருந்தார். சமரசம்
இதையடுத்து, ஒன்டாரியோ முதல்வர் டக் போர்டு தன் வலைதள பக்கத்தில், 'கனடாவும், அமெரிக்காவும் நல்ல நண்பர்கள், அண்டை நாடுகள் மற்றும் கூட்டாளிகள். 'நாங்கள் ஒன்றாக வலுவாக இருக்கிறோம் என்பதை முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன் அறிந்திருந்தார்' என தெரிவித்திருந்தார். இந்நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னே உடன் நடத்திய சந்திப்புக்கு பின், ஒரு சமரச முடிவை அறிவித்தார் டக் போர்டு. நாளை முதல் விளம்பரத்தை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளார்.