உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேச ராணுவ தளபதியுடன் மோதல்; ராஜினாமா செய்ய முஹமது யூனுஸ் திட்டம்

வங்கதேச ராணுவ தளபதியுடன் மோதல்; ராஜினாமா செய்ய முஹமது யூனுஸ் திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா : ராணுவ தளபதியுடன் மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவர் முஹமது யூனுஸ் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நம் அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர் அமைப்பினர் கடந்தாண்டு போராட்டத்தில் குதித்தனர். நாடு முழுதும் வெடித்த வன்முறையை அடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டைவிட்டு வெளியேறினார். அரசு கவிழ்ந்ததை அடுத்து, பொருளாதார நிபுணர் முஹமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. அப்போது, அடுத்த ஆறு மாதத்திற்குள் பொது தேர்தல் நடத்தி, புதிய அரசை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, இடைக்கால அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்த ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமானை ஆலோசிக்காமல், தேசிய பாதுகாப்பு ஆலோசகரை யூனுஸ் நியமித்தார். இது, இரு தரப்பினருக்கும் இடையே உரசலை ஏற்படுத்தியது. இதையடுத்து, உடனடியாக பொதுத் தேர்தலை அறிவிக்கும்படி, யூனுசுக்கு ராணுவ தளபதி ஜமான் அழுத்தம் கொடுத்து வருகிறார். இது தொடர்பாக பிற தளபதிகளுடன் ஆலோசிக்க அவசர கூட்டத்தை சமீபத்தில் கூட்டினார். பெரும்பாலான ராணுவ தளபதிகள், தேர்தல் நடத்த ஆதரவு தெரிவித்தனர். இது, முஹமது யூனுசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.வங்கதேச தேசியவாத கட்சி உள்ளிட்ட கட்சிகளும் பொது தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருவது, யூனுசுக்கான நெருக்கடியை அதிகரித்துள்ளது. இந்த சூழலில், மேயர் பதவி தொடர்பாக வங்கதேச தேசியவாத கட்சி, யூனுசுக்கு எதிராக டாக்காவில் போராட்டத்தில் குதித்துள்ளது. பிற மாணவர் அமைப்பினரும், அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதுபோன்ற தொடர் நெருக்கடிகளால், இடைக்கால அரசின் தலைவர் பதவியை முஹமது யூனுஸ் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து மாணவர்கள் தலைமையிலான தேசிய குடிமக்கள் கட்சி தலைவர் நித் இஸ்லாம் கூறுகையில், ''இந்த சூழலில் பணியாற்றுவது கடினம் என அவர் நினைக்கிறார். பிணைக் கைதியாக உள்ள என்னால் இனி வேலை செய்ய முடியாது என கூறியுள்ளார்,'' என, தெரிவித்தார்.

பின்னணி என்ன?

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்ட நிலையில், அடுத்த பெரிய கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி, பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் சூழல் உள்ளது. இதை விரும்பாத முஹமது யூனுஸ், பல்வேறு காரணங்களை கூறி தேர்தலை தள்ளி போடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. மாணவர்களை பயன்படுத்தி போராட்டங்களை துாண்டி, அதிகாரத்தில் தொடர்ந்து ஒட்டிக்கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

VELU VISHWAKARMA
மே 25, 2025 21:37

ஏற்கனவே இந்த மாதிரி பாகிஸ்தான் நாட்டின் ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.இப்போதும் அதே மாதிரி பாகிஸ்தான் நாட்டின் ராணுவம் என்பதை விட தீவிரவாத அமைப்பு நடத்தும் நாடு என்று நினைக்கிறேன்


Balasubramanian
மே 24, 2025 05:46

மியான்மர் இல் (பர்மாவில்) கூட இதுவே நடந்தது ஆங் சான் சூ கீ என்னும் நோபல் பரிசு பெற்ற புரட்சி பெண்மணி ஆட்சியை பிடித்தார் பிறகு நாட்டில் பல்வேறு உள்நாட்டு போராட்டம் கலகம் வெடித்தது! ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைத்தனர்! ராணுவம் இப்போது ஆட்சியில் இருக்கிறது!! இப்படியே பங்களாதேஷ் இல் முகமது யூனுஸ் கூட நோபல் பரிசு பெற்றவர், மக்கள் மன நிலையைப் புரிந்து கொண்டு சீரிய ஆட்சியை தருவார் என்று எதிர் பார்பு ஏமாற்றமே அளித்துள்ளது! இனி இங்கும் இராணுவ ஆட்சிதான் மிகும்! பாகிஸ்தான், பங்களாதேஷ், என்ன? ஸ்ரீ லங்கா கூட இராணுவ ஆட்சி நிலைதான்! இந்தியா மிக எச்சரிக்கை உடன் செயல் பட வேண்டிய நேரம் இது!


முக்கிய வீடியோ