தென் கொரிய எழுத்தாளர் ஹான் கேங்குக்கு நோபல் பரிசு
ஸ்டாக்ஹோம், ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் தலை சிறந்து விளங்கியவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு துறைக்கான அறிவிப்பும், கடந்த 7ம் தேதி துவங்கியது.இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர் ஹான் கேங்குக்கு, 53, நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, நோபல் பரிசு பெறும் தென்கொரியாவின் முதல் எழுத்தாளர் என்ற பெருமையை இவர் பெற்றுஉள்ளார்.இவர், தன் கவிதைகளை 1993ல் வெளியிட்டு இலக்கியத் துறைக்குள் வந்தார். இவரது, 'வெஜிடேரியன்' என்ற நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு பரவலாக வரவேற்பை பெற்றது. இந்நாவலுக்காக, 2016ல் சிறந்த புத்தகத்துக்கான சர்வதேச புக்கர் பரிசை ஹான் கேங் பெற்றுள்ளார். 'இவரது இலக்கிய பணி, உடல் மற்றும் ஆன்மா, பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகள் பற்றிய தனித்துவமான விழிப்புணர்வை கொண்டுள்ளது' என, நோபல் கமிட்டியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.