| ADDED : நவ 15, 2025 02:57 PM
சண்டிகர்: குருநானக் ஜெயந்தி விழா யாத்திரையின் போது மாயமான சீக்கியப் பெண்ணை, பாகிஸ்தானில் மதமாற்றம் செய்து முஸ்லிம் நபர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5ம் தேதி குருநானக் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள், குருநானக் ஜெயந்தி விழாவைக் கொண்டாட பாகிஸ்தானுக்கு யாத்திரை செல்வது வழக்கம். இதற்காக, இருநாடுகளிடையே பரஸ்பரமான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதையொட்டி, நவ.,4ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில், வாஹா - அடாரி எல்லையைக் கடந்து சில சீக்கிய பக்தர்களுடன் சேர்ந்து, பஞ்சாப்பின் கபுர்தலா பகுதியைச் சேர்ந்த சரப்ஜீத் கவுரும் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். கடந்த நவ.,13ம் தேதி மொத்தம் 1900 பக்தர்கள் மீண்டும் இந்தியா திரும்பிய நிலையில், சரப்ஜீத் கவுர் மட்டும் வரவில்லை.அதேபோல, பாகிஸ்தான் குடியேற்ற அதிகாரிகளும், கவுர் மட்டும் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்று இந்திய அதிகாரிகளிடம் தகவல் கொடுத்தனர். இதனிடையே, சரப்ஜீத் கவுர் மதமாற்றம் செய்து, லாகூரின் ஷேக்புரா மாவட்டத்தைச் சேர்ந்த நசீர் ஹூசேன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.