| ADDED : ஆக 16, 2025 10:31 PM
லண்டன்:'' உக்ரைன் தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை திறம்பட பாதுகாக்க பாதுகாப்பு உத்தரவாதங்களை கொண்டு இருக்க வேண்டும்,'' என ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இத்தாலி பிரதமர் மெலோனி, ஜெர்மனி அதிபர் மெர்ஸ், பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர், பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டப், போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர் உள்ளிட்டோர் கையெழுத்து போட்டு கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசிய பிறகு எங்களிடமும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடமும் அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்தார். உக்ரைனில் மக்கள் கொல்லப்படுவதை தடுக்கவும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வரவும், அமைதியை நிலைநாட்டவும் அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகளுக்கு வரவேற்பு தெரிவிக்கிறோம்.' போர் நிறுத்தம் முடிவாகும் வரை எந்த ஒப்பந்தமும் கிடையாது' என டிரம்ப் கூறியுள்ளார். அவர் கூறியபடி அடுத்து நடக்கும் பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் சேர்த்து கொள்ள வேண்டும். அவர் விரைவில் அதிபர் டிரம்ப்பை சந்திக்க உள்ளார். ஐரோப்பா ஆதரவுடன், முத்தரப்பு பேச்சு நடக்க அதிபர் டிரம்ப், ஜெலன்ஸ்கியுடன் இணைந்து செயலாற்ற தயாராக இருக்கிறோம். உக்ரைன் தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை திறம்பட பாதுகாக்க பாதுகாப்பு உத்தரவாதங்களை கொண்டிருக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம். அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க தயாராக உள்ளது என்ற அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பை வரவேற்கிறோம். ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். உக்ரைனின் ஆயுதப்படைகள் அல்லது மூன்றாம் நாடுகளுடன் இணைந்து செயல்படுவதற்கு எந்த வரம்புகளும் விதிக்கப்படக்கூடாது. ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோவில் உக்ரைன் சேரும் விஷயத்தில் ரஷ்யாவுக்கு வீட்டோ அதிகாரமும் இருக்கக்கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.