உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடவள் அரங்கம் / கடனை அடைக்க கடும் உழைப்பு; சேயுடன் கூரியர் டெலிவரி அசராமல் பணிபுரியும் தாய்

கடனை அடைக்க கடும் உழைப்பு; சேயுடன் கூரியர் டெலிவரி அசராமல் பணிபுரியும் தாய்

மைசூரு நகரின் சுண்ணதகேரி ஆறாவது குறுக்கு சாலையில் வசித்து வருபவர் அனு. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவரின் தாய்க்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.

முழு பாரம்

தந்தை இல்லாததால், தாயாரின் உயிரை காக்க, வீட்டை அடமானம் வைத்து வங்கியிலும், உறுவினர்கள், தனியார் நிதி நிறுவனங்களில் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். ஆனாலும், தாயாரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. கடனை அடைக்கும் முழு பாரமும் அவர் தலையில் விழுந்தது.எஸ்.எஸ்.எல்.சி., முடித்த அனு, தையல் பயிற்சி முடித்துள்ளார். இது முடித்த பின், கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் பணி கிடைத்தது. ஆனால், ஒன்றரை வயது மகனை வைத்து கொண்டு, பணியாற்ற முடியவில்லை. அத்துடன் இங்கு பணியாற்றுவதால் கிடைக்கும் ஊதியமும், கடனை அடைக்க முடியவில்லை. இவருக்கு துணையாக அவரது கணவரும், கடனை அடைக்க உதவி செய்து வருகிறார்.இப்பணியை விடுத்து, கூரியர் நிறுவனத்தில் பணிக்கு விண்ணப்பித்த அனுவுக்கு, அந்நிறுவனம் வேலை கொடுத்தது. அத்துடன் மகனை உடன் அழைத்து செல்லவும் அனுமதி அளித்தது.

500 ரூபாய்

தினமும் தனது மகனுடன் இரு சக்கர வாகனத்தில் மண்டி மொஹல்லா, பம்பு பஜார், சுல்தான் பூங்கா, சன்னி சவுக், கைலாஷ்புரம், திலக் நகர் என பல பகுதிகளில் 40 முதல் 50 பார்சல்களை டெலிவரி செய்து வருகிறார். இவரின் நிலையை அறிந்த மற்றொரு கூரியர் நிறுவனம், ஒவ்வொரு பார்சலுக்கும் 15 ரூபாய் வழங்க முன்வந்தது. இதன் மூலமும் தினமும் 500 ரூபாய் சம்பாதித்து வருகிறார்.இது குறித்து அனு கூறியதாவது:தினமும் என் பணி அதிகாலை முதலே துவங்கிவிடும். என் கணவருக்கு காலை, மதிய உணவு தயாரிப்பேன். அதன்பின், நானும், என் மகனும் தயாராகிவிடுவோம். மகனுடன் இரு சக்கர வாகனத்தில் கூரியர் நிறுவனத்துக்கு செல்வேன். ஒன்றரை வயது மகனுக்கு தேவையான உணவை தயாரித்து வைத்து கொள்வேன்.

வீடு ஏலம்

மதிய நேரம் டெலிவரி செய்த பின், செல்லும் இடத்தில் உள்ள ஹோட்டல்களில் உணவு சாப்பிட்டு விட்டு, சிறிது ஓய்வுக்கு பின், மீண்டும் பணியை தொடருவேன்.அன்றைய தினம் டெலிவரி செய்ய வேண்டிய கனமான பார்சல்களை பெரிய பையில் வைத்து கொண்டு, நகர் முழுதும் டெலிவரி செய்வேன். வாழ்க்கை வாழ போராடி கொண்டிருக்கும் போது, இந்த பையின் கனம் பெரிதல்ல.நகரின் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கவனித்து கொள்ள குழந்தைகள் மையம் இல்லை. அல்லது மகனுடன் விளையாட மற்ற குழந்தைகளும் இல்லை. எனவே கொளுத்தும் வெயலில் என் மகனுடன் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கிறேன்.என் தாயார் மருத்துவ செலவுக்காக வங்கியில் வீட்டை அடமானம் வைத்து பணம் வாங்கினேன். இதற்காக மாதந்தோறும் 15,000 ரூபாய் செலுத்தி வருகிறேன். கடந்த மூன்று மாதங்களாக தவணையை கட்ட முடியாததால், பணத்தை செலுத்த முடியவில்லை. தற்போத என் வீட்டை ஏலத்தில் விடுவதாக கூறி வருகின்றனர்.ஒரு கையில் மகனின் எதிர்காலத்துக்கும், மற்றொரு கையில் என் தலை மீது உள்ள பாரத்தை போக்கவும் தினமும் நம்பிக்கையுடன் போராடி வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ