மருதாணி ஓவியத்தில் மாணவி சாதனை
- நமது நிருபர் - கைகளில் போடப்படும் மருதாணி, சில மணி நேரங்கள் மட்டுமே, அழகாக தென்படும். அதன்பின் மறைந்துவிடும். இதே மருதாணியால், 100 அடி நீளமான ஓவியம் வரைய முடியும் என்பதை, இளம் பெண் சாதித்து காட்டியுள்ளார். இதனால், இந்திய சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார். மருதாணி என்றாலே பெண்களின் முகம் மலரும். இன்றைக்கும் பண்டிகை, திருமணம், பிறந்த நாள் உட்பட, பல்வேறு சிறப்பு நாட்களில், பெண்கள், சிறுமியர் தங்களின் இரண்டு கைகளிலும் விதவிதமான டிசைன்களில் மருதாணி போட்டு கொள்வர். மருதாணி போடுவது, அற்புதமான கலையாகும். சிலருக்கு இது கை வந்த கலை. இவர்களில் கீர்த்தி முரளீதரும் ஒருவர். மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கபட்டணா தாலுகாவின், நெலமனே கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தி முரளீதர், 21. இவர் கடந்த 2023ல், தன் தோழியின் கையில் மருதாணியால் ஓவியம் வரைந்தார். மாறுபட்ட இந்த ஓவியம் அனைவரையும் கவர்ந்தது. கீர்த்தி முரளீதரை பாராட்டினர். இந்த பாராட்டு அவரது மருதாணி ஆர்வத்தை அதிகரித்தது. சமூக வலைதளங்களில், மருதாணி டிசைன்களை பார்த்து, பயிற்சி பெற்றும், தன் கற்பனை திறனாலும், மருதாணி போடும் திறமையை வளர்த்து கொண்டார். இந்த திறமையால், தற்போது அவர் பிரபலமடைந்துள்ளார். மருதாணி போட்டு கொள்ள, பலரும் அவரை தேடி வருகின்றனர். மைசூரில் எம்.டெக்., படித்து வரும் இவர், படிப்புடன், மருதாணி மற்றும் மேக்கப் ஆர்ட்டிஸ்டாகவும் பணியாற்றுகிறார். தன் வித்தியாசமான சிந்தனைகளால், மக்களை கவர்ந்துள்ளார். கீர்த்தியின் மனதில் பெரிய கனவு இருந்தது. வட மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி ராமசந்திரா என்ற இளம் பெண், 39 அடி நீளமான துணியில், மருதாணி ஓவியம் வரைந்து சாதனை செய்திருந்தார். அந்த சாதனையை முறியடிக்க வேண்டும் என, கீர்த்தி விரும்பினார். இதற்கு கல்லுாரி நிர்வாகமே ஊக்கமளித்தது. இரண்டு நாட்களுக்கு முன், கல்லுாரி வளாகத்தில் 100 அடி நீளம், 1.57 அடி அகல துணியில் மருதாணி குப்பிகளை கொண்டு, கீர்த்தி ஓவியம் வரைந்தார். இவரது கை வண்ணத்தில் உருவான, அழகான மருதாணி ஓவியம், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இவரது இந்த சாதனை, இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. மருதாணி வெறும் அலங்கார பொருள் அல்ல. கனவுகளை நனவாக்கும் சாதனமாகவும் இருக்கலாம் என்பதை, கீர்த்தி முரளீதர் நிரூபித்துள்ளார்.