உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடவள் அரங்கம் / விவசாயியின் பொருளாதாரத்தை உயர்த்திய மனைவி

விவசாயியின் பொருளாதாரத்தை உயர்த்திய மனைவி

ஒரு குடும்பம் எந்த பிரச்னையும் இல்லாமல், வளமாக வாழ்வதில் பெண்களின் பங்களிப்பு அதிகம். கணவருக்கு மனைவி நல்ல மதியூக மந்திரியாக இருக்க வேண்டும். கணவர் தடுமாறும் போது, தோள் கொடுப்பது மனைவிதான். இத்தகைய மனைவி அமைவது, கடவுள் அளித்த வரம் என, சொல்வதுண்டு. இது போன்ற வரம், விவசாயி ஒருவருக்கும் கிடைத்துள்ளது.சாம்ராஜ்நகர் மாவட்டத்தின், உம்மத்துார் கிராமத்தில் வசிப்பவர் விவசாயி நாகசந்துரு. இவர் ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். பல முறை விவசாயம் கைகொடுக்கவில்லை. பாடுபட்டு விளைவிக்கும் விளைச்சலுக்கு, நியாயமான விலை கிடைக்கவில்லை. வறுமையில் வாழ்ந்தார்.அப்போது அவரது மனைவி யஷோதா, சொந்தமாக ஏதாவது தொழில் செய்யலாம் என ஆலோசனை கூறினார். கணவருக்கும் பல நாட்களாகவே, தொழில் செய்ய வேண்டும் என்ற கனவு இருந்தது. சிறிய முதலீட்டில் என்ன தொழில் செய்யலாம் என, மனைவியுடன் ஆலோசனை நடத்தினார். வீட்டு பயன்பாட்டுக்கு தயாரிக்கும் அப்பளத்தையே அதிகம் தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்தனர். அதை செயல்படுத்தினர். வீட்டிலேயே அப்பளம் தயாரித்து விற்க துவங்கினர். பத்து ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருகின்றனர். மனைவியும், மகளும் நாகசந்துருவுக்கு உறுதுணையாக நிற்கின்றனர். தினமும் இரவு உணவுக்கு முன், இரண்டு மணி நேரம், உணவுக்கு பின் இரண்டு மணி நேரம், அப்பளம் தயாரிக்கும் பணியை செய்கின்றனர். ஒரு கட்டு அப்பளத்தில், 50 அப்பளங்கள் உள்ளன. இதனை 150 ரூபாய்க்கு விற்கின்றனர். கடைகள், திருமணங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள், வீடுகளுக்கு சப்ளை செய்கின்றனர். தினமும் ஆயிரக்கக்கான ரூபாய் வருவாய் சம்பாதிக்கின்றனர். குறைந்த விலையில், தரமான அப்பளங்கள் தயாரித்து தருவதால், கிராமத்தில் இவர்களின் அப்பளத்துக்கு மவுசு உள்ளது. உம்மத்துார் கிராமத்தின் சுற்றுப்புற கிராமங்களுக்கும், இவர்கள் தயாரிக்கும் உளுந்து அப்பளங்கள் செல்கின்றன. சிறிய முதலீட்டில் அதிக லாபம் பெறுகின்றனர். தேவையான நேரத்தில் யஷோதா, தன் கணவருக்கு சரியான ஆலோசனை கூறியதன் பலனாக, இன்று இவர்களின் குடும்பத்தினர் வறுமையில்லாமல் வாழ வழி செய்துள்ளது. விவசாயத்தை மட்டுமே நம்பியிராமல், விளைச்சல் கை விட்டது என புலம்பாமல், இதுபோன்று தெரிந்த கைத்தொழிலை செய்தால், வறுமையை விரட்டி அடிக்கலாம் என்பதற்கு, நாகசந்துரு குடும்பத்தினர் முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.விவசாயி நாகசந்துரு கூறுகையில், ''என் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு, மனைவியின் ஆலோசனையே காரணம். மனைவி சொல்வதை கேட்டால், எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதற்கு, நானே சிறந்த உதாரணம்,'' என, நெகிழ்ச்சியுடன் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ