உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் /  மைசூரு வீரரை கவுரவித்த பி.சி.சி.ஐ.,

 மைசூரு வீரரை கவுரவித்த பி.சி.சி.ஐ.,

- நமது நிருபர் -: புதுடில்லியில், சில நாட்களுக்கு முன் பி.சி.சி.ஐ., எனும் இந்திய கிரிக்கெட் ஆணையம் சார்பில், விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், மைசூரை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஜெகதீசா சுஜித், 32, கடந்த, 2024 - 25 ரஞ்சி கோப்பையில், 43 விக்கெட்டுகளை வீழ்த்தி, 454 ரன்கள் எடுத்ததற்காக, 'மாதவராவ் சிந்தியா விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டார். மைசூரை சேர்ந்த ஜெகதீசா சுஜித்துக்கு, சிறு வயது முதலே கிரிக்கெட் என்றால் அலாதி பிரியம். அதுவும், 'கிரிக்கெட் கடவுள்' என்று அழைக்கப்படும், சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகர். இந்திய அணி விளையாடும் போட்டிகளை ஒன்று விடாமல் பார்த்து விடுவார். கிரிக்கெட் மீதான இவரின் ஆர்வத்தை கவனித்த அவரது தந்தை, முன்னாள் இந்திய அணி வீரர் ஜவகல் ஸ்ரீநாத் பயிற்சி பெற்ற நாயுடு ஜிம்கானாவில், சுஜித்தை சேர்த்தார். தன் வெற்றி பயணம் குறித்து ஜெகதீசா சுஜித் கூறியதாவது: எனக்கு ஒன்பது வயது இருக்கும் போது, கர்நாடகாவில், 13 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இரண்டு ஆண்டுகள் விளையாடினேன். கிரிக்கெட்டில் அனைத்து வயதுக்கு உட்பட்ட கர்நாடக அணியிலும் விளையாடி உள்ளேன். இதற்காக ஒவ்வொரு முறையும் மைசூரில் இருந்து பெங்களூருக்கு அடிக்கடி பயணித்து வந்தேன். கிரிக்கெட் தான் என் வாழ்க்கை என்று முடிவானதும், பெங்களூரில் நிரந்தரமாக தங்கி விட்டேன். என், 21வது வயதில், 'விவோ இந்தியன் பிரீமியர் லீக்' போட்டியில் மும்பை இந்தியா அணியில் இடம் பெற்றேன். 2015ல் மும்பை இந்தியா அணி, கோப்பையை வென்றது. இந்த போட்டியில், 13 போட்டிகளில் 10 விக்கெட்களை வீழ்த்தியது மகிழ்ச்சி அளித்தது. அதன்பின் மைசூரில் நடந்த கர்நாடகா - வங்தேசம் 'ஏ' அணிகளுக்கு இடையேயான போட்டியில், 60 ரன்களுக்கு ஆறு விக்கெட்களை வீழ்த்தி, கர்நாடகாவை வெற்றி பெற வைத்தது மகிழ்ச்சி அளித்தது. கடந்த, 2016ல் கர்நாடகாவுக்காக பல போட்டிகளில் பங்கேற்றேன். ஆனாலும், அந்த ஆண்டின் இறுதியில் அணியில் இருந்து நீக்கப்பட்டேன். கிரிக்கெட்டில் எழுச்சி பெற வேண்டும் என்பதற்காக, 'கிளப் கிரிக்கெட்'டில் விளையாட துவங்கினேன். இரண்டு ஆண்டுகள் என் வாழ்க்கையின் மிகவும் கடினமான காலகட்டம். ஆனாலும், கிரிக்கெட்டை விடவில்லை. பெங்களூரில் உள்ள 'வல்ச்சர்ஸ் சிசி' கிளப்புக்காக மீண்டும் விளையாட சென்று, 11 போட்டிகளில் 41 விக்கெட்களை வீழ்த்தி, அதிக விக்கெட்களை எடுத்தது பெருமை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இவர் மும்பை இந்தியன் மட்டுமின்றி, டில்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்க்ஸ், சன்ரைசஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கும் விளையாடி உள்ளார். கே.எஸ்.சி.ஏ., மஹாராஜா கோப்பை போட்டியில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் மற்றும் மைசூரு வாரியர்ஸ் அணிக்காகவும் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை