கேலி, கிண்டலை கடந்து விவசாயத்தில் சாதித்த பி.எட்., பட்டதாரி கீர்த்தி
நாட்டின் பொருளாதாரத்தின் விவசாயமும் முன்னோடியாக உள்ளது. இன்றைய நவீன காலகட்டத்தில் அரசு பணி, தனியார் நிறுவனங்களில் உயர் பதவியில் இருப்பவர்கள் கூட, தங்கள் வேலையை உதறிவிட்டு விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். குறைந்த முதலீடு அதிக லாபம் என்பதால், விவசாயத்தின் மீது பலருக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. நன்கு படித்து விட்டு விவசாயம் செய்வது எளிதான விஷயம் இல்லை. உறவினர்கள் கேலி, கிண்டலை சமாளித்து வெற்றி பெற வேண்டும். இப்படி சாதித்தவர்கள் நிறைய பேர். இவர்களில் ஒருவர் கீர்த்தி ரங்கசாமி.சாம்ராஜ்நகர் தாலுகா ஒண்டரபாலு கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தி. இவருக்கும், ஹனுார் தாலுகாவின் ஹொன்னுார் கிராமத்தின் ரங்கசாமிக்கும், ஐந்து ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரங்கசாமி விவசாயி ஆவார். கீர்த்தி பி.எட்., பட்டதாரி. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணி செய்தார்.திருமணத்திற்கு பின், கணவருக்கு உதவ வேண்டும் என்பதற்காக விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்தார். பி.எட்., படித்து விவசாயம் செய்கிறாயா என்று உறவினர்களின் கேலி, கிண்டலுக்கு ஆளானார். ஆனால் எதை பற்றியும் கவலைப்படாமல் விவசாயத்தில் முழு கவனம் செலுத்தினார்.மனம் திறந்து கீர்த்தி கூறியதாவது:நன்கு படித்தவர்கள் விவசாயம் செய்ய கூடாது என ஏதாவது கட்டுப்பாடு உள்ளதா. எனக்கு பிடித்து இருப்பதால், கணவருடன் சேர்ந்து விவசாயம் செய்கிறேன். மூன்று ஏக்கர் நிலத்தில் மிளகு, ஏலக்காய் பயிரிட்டு வளர்த்து வருகிறோம். விளைச்சலில் நல்ல லாபம் கிடைக்கிறது.மாட்டு சாணம், பட்டுப்புழு கழிவுகளை உரமாக பயன்படுத்துகிறோம். ரசாயன உரம் பயன்படுத்தினால் செடிகளுக்கு விரைவில் நோய் வந்து விடும். செடிகளில் வேப்ப எண்ணெய், மூலிகை கசாயத்தை தெளிக்கிறேன். சரியான அளவு நிழல், சூரிய ஒளி போன்றவை மிளகு, ஏலக்காய் விளைச்சலுக்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தது. சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயம் செய்கிறேன். தற்போது மரவள்ளிகிழங்கு, வெற்றிலை பயிரிட்டு உள்ளோம். விளைந்த பின், நல்ல வருமானம் கிடைக்கும். உறவினர்கள் கேலி, கிண்டல் செய்கின்றனர் என்று நினைத்தால், வாழ்க்கையில் ஒரு போதும் முன்னேற முடியாது. நமது மனதிற்கு பிடித்ததை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் -.