உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் / மரங்கள் வளர்ப்புக்கு வாழ்க்கையை அர்ப்பணித்த ஷாமண்ணா

மரங்கள் வளர்ப்புக்கு வாழ்க்கையை அர்ப்பணித்த ஷாமண்ணா

உலகில் தினமும் லட்சக்கணக்கானோர் பிறக்கின்றனர், இறக்கின்றனர். சிலர் மட்டுமே தங்களின் வாழ்க்கையை, அர்த்தமுள்ளதாக வாழ்கின்றனர். இவர்களில் ஷாமண்ணாவும் ஒருவர். மலைப்பகுதியை பசுமையாக்க, தன் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். தாவணகெரே மாவட்டம், ஜகளூரு தாலுகாவின், ஹிரே அரகெரே கிராமத்தை சேர்ந்தவர் ஷாமண்ணா, 70; இயற்கை ஆர்வலர். ஜகளூரின், கொரடகரே கிராமத்தில் இருந்து, கூப்பிடும் துாரத்தில் கொனசகல் ரங்கநாத சுவாமி மலை உள்ளது. இங்கு ஸ்ரீலட்சுமி சமேதராக ரங்கநாதசுவாமி காட்சியளிக்கும் கோவில் உள்ளது. ஷாமண்ணா, ரங்கநாத சுவாமியின் தீவிர பக்தர். தன் 40வது வயதில், ஷாமண்ணா இந்த கோவிலுக்கு வந்தார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. அன்று முதல் இன்று வரை, மலையிலேயே வசிக்கிறார். 30 ஆண்டுகளாக மரங்களை வளர்த்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க பணியாற்றுகிறார். மா, பலா, வேம்பு, புளி, புங்கை, நாவல், நீலகிரி, வில்வம், அத்தி மரம் உட்பட, பல்வேறு மரக்கன்றுகளை நட்டு வளர்த்துள்ளார். இவர் ஆயிரக்கணக்கான பறவைகளுக்கு அடைக்கலம் அளித்துள்ளார். ரங்கநாத சுவாமி மலையை பசுமையாக வைத்திருப்பதற்காக, தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ளார். வீட்டை மறந்து, மலையே தன் வீடு மற்றும் குடும்பம் என, நினைத்து வாழ்கிறார். பக்தர்கள் நடந்து செல்ல வசதியாக, கற்களை அடுக்கி, படிகள் அமைத்துள்ளார். 30 ஆண்டுகளாக கோவில் பிரசாதத்தை சாப்பிட்டு, இங்கேயே, வாழ்ந்து வருகிறார். ரங்கநாத சுவாமி மலையில், பாளையக்காரர்களால் அமைக்கப்பட்ட குளம், ரங்கநாதசுவாமியின் கோவில் உள்ளது. வெளி மாவட்டம், நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் இந்த புண்ணிய தலத்தை, பசுமையாக வைத்திருப்பது, ஷாமண்ணாவின் குறிக்கோள். சாலுமரத திம்மக்காவை போன்று, ஷாமண்ணாவும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு, 30 ஆண்டுகளாக மரங்களை வளர்ப்பதன் மூலம் தன் பங்களிப்பை அளிக்கிறார். ஒவ்வொரு மரத்துக்கும், செடிக்கும் குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றுகிறார். இப்பகுதியில் கரடிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அவற்றின் உணவுக்காக பழ மரங்களை வளர்த்துள்ளார். இவரது கைங்கர்யத்தால் இன்று ரங்கநாதசுவாமி மலையே, பசுமையாக தென்படுகிறது. 30 ஆண்டுக்கு முன்பு, அவர் மலைக்கு வந்தபோது, படிகளே இருக்கவில்லை. அப்போது அவர் தன் கைகளால் கற்களை பொருத்தி, படிகள் அமைத்து வழி ஏற்படுத்தினார். பக்தர்கள் இப்போது, அந்த படிகளைத்தான் பயன்படுத்துகின்றனர். அது மட்டுமல்ல, கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலையில் தங்குவதற்கு, மூன்று சிறிய மடங்களை கட்டியுள்ளார். இதற்கு மின் இணைப்பு பெற்று, விளக்குகள் பொருத்தியுள்ளார். காவி உடை அணிந்து கடவுளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் சேவை செய்கிறார். கோவில் அர்ச்சகர் ரங்கசாமி கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளாக, ஷாமண்ணா மலையில் வாழ்கிறார். நுாற்றுக்கணக்கான மரங்களை வளர்த்து, மலையை பசுமையாக மாற்றியுள்ளார். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக படிகள் அமைத்தார். இன்றைக்கும் அவரை, பக்தர்கள் நினைவுகூர்கின்றனர். கோவிலில் வழங்கும் பிரசாதத்தை சாப்பிட்டு, மலையிலேயே வசிக்கிறார். மரங்களை வளர்ப்பது, அவ்வளவு எளிதான வேலையல்ல. அதற்கு பொறுமையும், விடா முயற்சியும் வேண்டும். ஷாமண்ணா கோடியில் ஒருவர். ரங்கநாதசுவாமி பக்தரான இவர், தன் இறப்புக்கு முன்பே, சமாதி தயார் செய்துள்ளார். சமாதி மீது கல் வைத்து மூடியுள்ளார். தான் இறந்த பின், இங்கு சமாதி செய்யும்படி கூறியுள்ளார். இவரது சேவை, இலை மறைக்காயாக உள்ளது. கரடிகள் அதிகமாக வசிக்கும் மலையில், தன்னந்தனியாக வாழ்கிறார். இரவில் உணவு தேடி கோவில் அருகில் வரும் கரடிகளை, இவரே விரட்டியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை