டிக்கெட் கேட்காதீங்க..வீட்ல இருந்து பாருங்க : கோஹ்லி வேண்டுகோள்
உலகக் கோப்பை போட்டிகளை நேரில் பார்க்க, டிக்கெட் கேட்க வேண்டாமென ரசிகர்களுக்கு கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இந்தியாவில் 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை (அக்.,5) துவங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை மற்ற அணிகளுடன் மோதும். 45 லீக் போட்டிகள் முடிவில், முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். நவ.15., அரையிறுதி போட்டி கோல்கட்டாவிலும், நவ.,19ல் இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி, தனது முதல் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வரும் அக்.,8ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது. சொந்த மண்ணில் போட்டிகள் நடைபெறுவதால், இந்தியா அணி வென்று கோப்பையை கைப்பற்றுமென ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி, தனது அதிகாரபூர்வ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'நாம் உலக கோப்பையை நெருங்கி வருவதால், கிரிக்கெட் போட்டிக்கு என்னிடம் டிக்கெட் கேட்க வேண்டாம் என்று எனது நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். தயவுசெய்து உங்கள் வீடுகளில் இருந்து பார்த்து மகிழுங்கள்.' என பதிவிட்டுள்ளார்.