இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் தற்போது உச்சகட்டத்தை எட்டி வருகிறது. இன்று மூன்றாவது நாளாக ஹமாஸ் அமைப்பின் போராளிகள் இஸ்ரேலில் பல நூறு குடிமக்களையும் பாதுகாப்புப் படையினரையும் சரமாரியாக துப்பாக்கிகளில் சுட்டுத் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பான ஹேஷ்டேகுகள் தற்போது எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. ஹமாஸ் அமைப்பின் வரலாறு என்ன, அது ஒரு பயங்கரவாத அமைப்பா அல்லது அரசியல் அமைப்பா எனத் தெரிந்துகொள்வோம். 18 ஆம் நூற்றாண்டில் ஒட்டாமன் படையினரின் ஆட்சியில் இருந்த பாலஸ்தீன நிலப்பரப்பு, 19 ஆம் நூற்றாண்டு பிரிட்டன் காலனி ஆதிக்கத்துக்குச் சென்றது. ஐரோப்பிய யூதர்கள் பலர் பிரிட்டன் அரசால் பாலஸ்தீனத்தில் குடியேற்றப்பட்ட நிலையில் அவர்கள் இஸ்ரேல் எனும் தனி நாட்டை தங்களுக்கென உருவாக்கினர். இதனால் பாலஸ்தீனத்தின் பெரும்பான்மை நிலப்பரப்பு இஸ்ரேல் நாடாக உருமாறியது.
இதனால் இஸ்ரேலில் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் பிற அரபு நாடுகளுக்கு வெளியேற்றப்பட்டனர். பாலஸ்தீனத்தில் உள்ள இஸ்லாமியர்கள் பலர் இஸ்ரேல் குடியேறி யூதர்கள் மற்றும் அரசின்மீது கடுங்கோபம் கொண்டனர். இவர்கள் ஹமாஸ் என்னும் இஸ்ரேலை எதிர்க்கும் அமைப்பை 1987 ஆம் ஆண்டு உருவாக்கினர்.
துவக்கத்தில் இது ஒரு ஆயுதமேந்திய புரட்சிகர ராணுவ அமைப்பாகவே அறியப்பட்டது. ஆனால் இவர்கள் பாலஸ்தீன அரசியலில் அதிக செல்வாக்கு பெறவே, கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த பாலஸ்தீன நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பல நாடாளுமன்ற இடங்களைக் கைப்பற்றினர். இதனால் இவர்கள் பாலஸ்தீன நாடாளுமன்ற எதிர்க்கட்சி ஆகும் அளவுக்கு வலுப்பெற்றனர். இவர்கள் பாலஸ்தீனத்தின் காசா பகுதியைக் கட்டுப்படுத்தி வருகின்றனர். ஹமாஸ் அமைப்புக்கென தனிக் கொடி, தனிக் கொள்கை, தொண்டு நிறுவனம், மக்கள் பணிக்கான கிளைகள் உண்டு. இதுதவிர ஆயுதமேந்திய ராணுவ அமைப்பும் உள்ளது. கனடா, ஐரோப்பிய யூனியன், இஸ்ரேல், ஜப்பான், ஆஸி., பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஹமாஸை பயங்கரவாத அமைப்பாகக் கருதுகின்றன. அதே வேளையில் பிரேசில், சீனா, எகிப்து, ஈரான், நார்வே, கத்தார், ரஷ்யா, சிரியா, துருக்கி ஆகிய நாடுகள் ஹமாஸை பயங்கரவாத அமைப்பாகக் கருதவில்லை. ஹமாஸ் ஓர் அரசியல் அமைப்பாகவே இந்நாடுகளில் பார்க்கப்படுகிறது.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐநா., பொதுக்கூட்டத்தில் ஹமாஸின் பயங்கரவாத செயல்களைக் கண்டிக்கும் வாக்கெடுப்பு பெரும்பான்மை கிடைக்காமல் தோற்றுப் போனது. எனவே இப்போதுவரை ஹமாஸ் ஓர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பாக ஐநா.,வால் அறிவிக்கப்படவில்லை. அல் கொய்தா, லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாஹுதீன், ஜெய்ஷ் இ முகமது பட்டியலில் இன்னும் ஹமாஸ் சேராமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் உலகின் பல வல்லரசு நாடுகள் ஹமாஸை அரசியல் அமைப்பாகவே பார்ப்பதுதான்.
ஆனால் தற்போது இஸ்ரேலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் ஹமாஸ் படையினரால் கொல்லப்பட்டதால் வருங்காலத்தில் ஹமாஸ் ஓர் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு அதற்கெதிராக உலக நாடுகள் கூட்டமைப்பு செயல்பட வாய்ப்புள்ளது. ஹமாஸுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் தங்களது ஆதரவை விலக்கிக்கொள்ளலாம்.