ஏற்காடு தாவரவியல் பூங்காவில் அடிப்படை வசதிகள் இல்லை | Unmaintained Botanical Garden | Yercaud
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஏற்காடும் ஒன்று. இங்கு ஆண்டு தோரும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக ஏற்காட்டில் தோட்டக்கலைத்துறை சார்பாக அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், ஐந்திணை பூங்கா தாவரவியல் பூங்கா போன்ற பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஏற்காடு ஒண்டிகடை பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தாவரவியல் பூங்கா. இந்த பூங்கா மலை மீது அமைந்துள்ளதால் அங்கிருந்து பார்த்தால் ஏற்காடு டவுன் பகுதி அழகை கண்டு ரசிக்கலாம். ஏற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து பார்த்தால் தாவரவியல் பூங்கா மிகவும் அழகாக தெரியும். இதனால் இந்த பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் செல்கின்றனர். தாவரவியல் பூங்காவில் நுழைவு கட்டணமாக பெரியவருக்கு 50 ரூபாய் மற்றும் சிறியவர்களுக்கு 25 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. அதிக எதிர்பார்ப்புகளுடன் தாவரவியல் பூங்காவில் நுழையும் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. பூங்கா பராமரிப்பு இல்லாததால் புதர் மண்டி காணப்படுகிறது. அத்தியாவசிய தேவையான குடிநீர் மற்றும் சுகாதார வளாகம் உள்ளிட்ட வசதிகள் இல்லை. டாய்லெட் பூட்டப்பட்டு பல மாதங்கள் கடந்து விட்டது. டாய்லெட் கூட இல்லாமல் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூங்காவில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.