தண்டனை போதாது என சீக்கிய அமைப்புகள் அதிருப்தி! 1984 anti sikh riots | former congress leader | Sajja
1984 அக்டோபர் 31ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா கொல்லப்பட்டார். அதையடுத்து டில்லியில் கலவரம் ஏற்பட்டது. இந்திராவை கொன்றவர்கள் சீக்கியர்கள் என்பதால் சீக்கியர்கள் வாழ்விடங்கள் குறிவைக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர். சொத்துகள் சூறையாடப்பட்டன. சரஸ்வதி விஹார் பகுதியில் ஜஸ்வந்த் சிங் என்பவரும் அவருடைய மகன் தருண்தீப் சிங் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் அப்போது காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த சஜ்ஜன் குமார் கைதானார். இந்த வழக்கில் சஜ்ஜன் குமார் குற்றவாளி என டில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் கடந்த 12ம் தேதி தீர்ப்பு வழங்கியது. தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என கூறியது. இன்று சிறப்பு கோர்ட் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. ஆயுள் தண்டனையைத் தவிர, கலவரத்தில் ஈடுபட்டதற்காக 2 ஆண்டு சிறை, கொடிய ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதால் 3 ஆண்டு சிறை மற்றும் அபராதம், மரணம் அல்லது கடுமையான தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் கொலைக்கு முயன்றதற்காக 7 ஆண்டு சிறையும் அவருக்கு விதிக்கப்பட்டது. டில்லி கன்டோன்மென்ட் கலவர வழக்கில் ஏற்கனவே சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார். இப்போது இரண்டாவது வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.