ஆந்திர தலைநகர் அமராவதியை மேம்படுத்த வெளியானது அறிவிப்பு 2,200 crore for Andhra railway scheme | Jack
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் 2014ல் ஆந்திரா - தெலங்கானா என இரண்டாக பிரிந்தது. ஐதராபாத் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பொது தலைநகராக விளங்கும். அதன் பின் தெலங்கானாவின் தலைநகராக மட்டும் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆந்திர அரசு 10 ஆண்டுகளுக்குள் புதிய தலைநகரை உருவாக்கும் கட்டாயத்திற்கு ஆளானது. அமராவதியை புதிய தலைநகராக அறிவித்து அங்கு உள்கட்டமைப்பு பணிகளை அப்போது முதல்வராக இருந்த தெலுகு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு துவங்கினார். 2019ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒய்எஸ்ஆர் காங் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரானதும், அமராவதியை தலைநகராக உருவாக்கும் பணிகள் தொய்வடைந்தன. சமீபத்தில் நடந்து முடிந்த 2024 சட்டசபை தேர்தலில் சந்திரபாபு ஆட்சியை கைப்பற்றியதும், அமராவதியை தலைநகராக்கும் பணிகள் மீண்டும் வேகமெடுத்தன. லோக்சபா தேர்தலில் பாஜவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போனதால், சந்திரபாபுவின் தெலுகுதேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் ஆதரவுடன் மத்தியில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைத்தது. மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக செயல்படுவதாலும், மத்திய அரசுக்கு சந்திரபாபுவின் ஆதரவு தேவை என்பதாலும், ஆந்திராவுக்கு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்க ஏற்கனவே மத்திய பட்ஜெட்டில் 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், அமராவதியை நாட்டின் பிற நகரங்களுடன் இணைக்கும் வகையில், ரயில் இணைப்பு திட்டத்திற்காக 2,245 கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம், ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதியை, சென்னை, ஐதராபாத், கொல்கத்தா, நாக்பூர் நகரங்களுடன் ரயில் மூலம் இணைக்கப்படும். இந்த நகரங்களுக்கிடையே புதிய ரயில் வழித்தடம் அமைக்கப்படும். மேலும் அமராவதியில் இருந்து நாக்பூர் வழியாக டில்லி, ஐதராபாத் வழியாக மும்பை நகரங்களும் ரயில் வழித்தடத்தில் இணையும்.