தடை விதித்த உத்தரவை வாபஸ் பெற்றது ஐகோர்ட் | AIADMK | Palanisami Case | High Court
2022ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலராக பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரியும், திண்டுக்கலை சேர்ந்த சூரியமூர்த்தி சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி, பழனிசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை நான்காவது உதவி சிட்டி சிவில் கோர்ட், சென்ற மாதம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் பழனிசாமி சார்பில் மனு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி பாலாஜி, சிவில் கோர்ட் உத்தரவுக்கு தடை விதித்ததுடன், சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த சூழலில் சூரியமூர்த்தி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது குறித்து, கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. வழக்கு, நீதிபதி பாலாஜி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சூரியமூர்த்தி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதை மறைத்து, தடை உத்தரவு பெறப்பட்டு உள்ளது. கோர்ட்டை தவறாக பயன்படுத்தி உள்ளனர் என வாதிடப்பட்டது. சூரியமூர்த்தி, கட்சி உறுப்பினர் அல்ல. இந்த வழக்கை தாக்கல் செய்ய அவருக்கு உரிமை இல்லை என பழனிசாமி தரப்பில் வாதிட்டனர். தொடர்ந்து நீதிபதி, பழனிசாமிக்கு எதிராக உரிமையியல் கோர்ட்டில் சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கும், வழக்கை நிராகரிக்க மறுத்த உத்தரவுக்கும் விதித்த இடைக்கால தடை உத்தரவை திரும்ப பெற்றார். வழக்கின் விசாரணை வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.