வாழ்த்து மழையில் நனையும் இளம் செஸ் வீரர்! Gukesh | World Chess Championship | Champion
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. கேண்டிடேட்ஸ் தொடரில் கோப்பை வென்ற உலகின் நம்பர்- 5 வீரரான இந்தியாவின் குகேஷ், நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன் மோதினார். மொத்தம் 14 சுற்று கொண்ட போட்டியில், 13 சுற்று முடிவில் இருவரும் தலா 6.5 புள்ளியுடன், சம நிலையில் இருந்தனர். 14வது இறுதிசுற்று போட்டி நடந்தது. இதில் வெல்லும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம் என்ற நிலை இருந்தது. இம்முறை குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். 50வது நகர்த்தலின் போது, போட்டி டிராவை நோக்கி செல்வது போல இருந்தது. ஆனால் குகேஷ் வெற்றிக்காக போராடினார். 55வது நகர்த்தலில் லிரென், தனது யானையை தவறான இடத்தில் நகர்த்தி பெரிய தவறு செய்தார். வாய்ப்பை துல்லியமாக பயன்படுத்திக் கொண்ட குகேஷ், 58வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். 7.5 புள்ளியுடன் புதிய உலக சாம்பியன் ஆனார். 18 வயதான குகேஷ், உலக செஸ் சாம்பியன் ஆன இளம் வீரர் என சாதனை படைத்தார். இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த், ஐந்து முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார். தற்போது ஆனந்துக்குப் பின் உலக சாம்பியன் ஆன இரண்டாவது இந்தியர் ஆனார் குகேஷ். உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் ஆனந்த கண்ணீர் வடித்தார். என்னை நேசிக்கும் நாட்டு மக்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன். லிரென் தோல்விக்கு எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என குகேஷ் கூறினார்.