ஆபரேஷன் சிந்தூர்: பெண் அதிகாரிக்கு குவியும் பாராட்டு | Operation Sindoor | Col Sofiya Qureshi | Fami
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இந்திய ராணுவத்தின் முப்படைகள் மூலம் நடந்த தாக்குதல் குழுவில் பெண் வீராங்கனைகளும் இணைந்து செயல்பட்டனர். இதை உறுதிபடுத்தும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் பற்றிய ராணுவ அமைச்சகத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் 2 பெண் அதிகாரிகள் முக்கிய பங்கு வகித்தனர். ராணுவ கர்னல் சோபியா குரேஷி, விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இருவரும் தாக்குதல் நடத்தியது பற்றி விளக்கம் அளித்தனர். இவர்களை பற்றிய தகவல் வெளியானதும், நம் நாட்டு மக்கள் பாராட்ட தொடங்கினர். சோசியல் மீடியாக்களில் இரண்டு பெண் அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. சோபியா குரேஷியின் வீரதீர செயலால் பெருமை அடைந்துள்ள அவரது பெற்றோர் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். எங்கள் மகளை நினைத்து பெருமை கொள்கிறோம். நாட்டிற்காக சிறந்த விஷயத்தை எங்களது மகள் செய்துள்ளார் என தந்தை தாஜ் முகமது குரேஷி கூறினார். பாகிஸ்தான் அழிக்கப்பட வேண்டும். எனது தாத்தாவும், தந்தையும் ராணுவத்தில் பணியாற்றி உள்ளனர். தற்போது மகளும் பணியாற்றுவதாக தெரிவித்தார். நமது தாய்மார்களின் குங்குமத்தை அழித்தவர்களை பழிவாங்கிவிட்டோம் என தாயார் ஹலிமா குரேஷி தெரிவித்துள்ளார். எங்கள் மகள் நாட்டுக்காக செய்ததை நினைத்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இது மற்றவர்கள் தங்கள் மகள்களைப் படிக்க வைக்க ஊக்கமளிக்கும். அதனால் அவர்கள் நாட்டிற்கு சேவை செய்ய முடியும் என்றும் நம்புவதாக கூறினார். சகோதரர் சஞ்சய் குரேஷி, பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு பதிலடி எப்போது கொடுக்கப்படும் என காத்திருந்தோம்; ஆனால், இப்படி ஒரு நடவடிக்கையும், குடும்ப உறுப்பினர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கவில்லை என்றார். எங்களது குடும்பத்திற்கு இத்தகைய பெரிய வாய்ப்பு கிடைத்தது ஆச்சர்யமாக உள்ளது என்றும் கூறினார்.