4 சுயேட்சைகள் ஆதரவால் 46ஆக உயர்ந்த கட்சியின் பலம் | Omar abdullah | NC party | 4 Independent MLAs Su
நடந்து முடிந்த ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜ 29 இடங்களில் வெற்றி பெற்று பிரதான எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் 6 இடங்களிலும், மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி 3 இடங்களிலும் வென்றுள்ளன. இதுமட்டுமின்றி சுயேட்சைகள் 7 இடங்களிலும், ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி தலா ஒரு இடத்தையும் கைப்பற்றி உள்ளன. ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க 46 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் தேசிய மாநாட்டு கட்சியும், காங்கிரசும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கின்றன. ஒமர் அப்துல்லா முதல்வராக பொறுப்பேற்பார் என தேசிய மாநாட்டு கட்சி அறிவித்துள்ளது. இந்த சூழலில் சுயேட்சையாக வெற்றிபெற்ற பியாரே லால் சர்மா, சதீஷ் ஷர்மா, சவுத்ரி முகமது அக்ரம், டாக்டர் ராமேஷ்வர் சிங் ஆகிய 4 பேர் தேசிய மாநாட்டு கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அக்கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கட்சி சட்டசபை தலைவராக தேர்வான பின் பேசிய பரூக் அப்துல்லா இதை உறுதி செய்தார். இதன்மூலம் தேசிய மாநாட்டு கட்சியின் பலம் 46 ஆக உயர்ந்துள்ளது. காங்கிரசிடம் இருந்து ஆதரவு கடிதம் பெறும் பேச்சு நடக்கிறது. கடிதம் கிடைத்ததும் ராஜ்பவன் சென்று ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோருவோம் என்றும் ஒமர் அப்துல்லா கூறினார்.