கள்ளச்சாராய வழக்கில் கைது: 18 பேர் மீதான குண்டாஸ் ரத்து kallakurichi illicit liquor tragedy chennai
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் இறந்தனர். தமிழகத்தையே அதிர வைத்த இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர். சாராயம் விற்ற கண்ணுகுட்டி என்ற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன், உறவினர் பரமசிவம், ராமர், தெய்வீகன், அய்யாசாமி, ஷாகுல் அமீது, வேலு, மெத்தனால் சப்ளை செய்த ஜோசப், மாதேஸ், சிவகுமார் உள்ளிட்ட 24 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். ஒருவர் ஜாமினில் விடுதலையாக, மற்ற 23 பேரும் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி நடத்தினால் உண்மை வெளிவராது என தமிழகத்தில் உள்ள எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. சென்னை ஐகோர்ட், கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டது. இதனிடையே, கைதான சாராய வியாபாரி கண்ணுக்குட்டி உள்ளிட்ட 18 பேரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். குண்டர் சட்டத்தில் தங்களை கைது செய்ததை எதிர்த்து 18 பேரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜோதிராமன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிடுகையில், காலதாமதமாக குண்டர் சட்டத்தில் கைது செய்தனர் என்றார்.