எல்லை மீறிய சம்பவத்தால் மறு தாக்குதல் ; 2 வீரர்களும் காயம் | Manipur | Manipur attack | Kuki Militan
மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இனத்தவர்களிடையே கடந்த ஆண்டு மே முதல் மோதல் ஏற்பட்டு பதற்றம் நிலவி வருகிறது. இவர்களுக்குள் இடையே நடந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். வன்முறை காரணமாக பலர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். இரு குழுவினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த சூழலில், குக்கி ஆயுத குழுவினர் நேற்று கிழக்கு இம்பாலில் உள்ள கிராமங்கள் மீது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். ஜிரிபம் மாவட்டத்தின் போரோபெக்ரா பகுதியில் அமைந்துள்ள பல கடைகள் எரிக்கப்பட்டு உள்ளது. இம்பால் பள்ளத்தாக்கில் வயல்களில் பணிபுரியும் விவசாயிகள் மீது மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அவர்கள் சிஆர்பிஎஃப் முகாம் மீதும் தாக்குதல் நடத்தியது துப்பாக்கி சண்டைக்கு வழிவகுத்தது. சிஆர்பிஎஃப் வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். இதில் 2 சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் அதில் ஒருவரின் நிலைமை சீரியசாக இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. கடந்த மூன்று நாட்களாக மணிப்பூரின் மலை மற்றும் பள்ளத்தாக்கு பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. சிஆர்பிஎஃப் முகாம் அருகே இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண முகாம் உள்ளது. தாக்குதல் நடந்த இடத்தில் அப்பகுதியினர் சிலரை காணவில்லை. அவர்கள் கடத்தப்பட்டார்களா அல்லது தாக்குதல் தொடங்கிய பிறகு தலைமறைவாக எங்கும் பதுங்கி உள்ளனரா என்பது குறித்து விசாரிப்பதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.