துணிச்சலான வீரரின் முழு பாதுகாப்புக்கு நாங்க கியாரண்டி! | Karni Sena | Lawrence Bishnoi | Karni Sena
மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் அக்டோபர் 12ம் தேதி சுட்டு கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் காரணம் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. கொலை சம்பவத்தில் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பிஷ்னோய் கூட்டாளிகள்தான் கூலிப்படையை ஏவி இந்த கொலையை செய்துள்ளனர். ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் என வட மாநிலங்களில் கூலிப்படைகளை வைத்து லாரன்ஸ் பிஷ்னோய் செய்த குற்றங்கள் ஏராளம். கொலை, ஆட்கடத்தல் என பல வழக்குகளில் சிக்கி 31 வயதான பிஷ்னோய் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இது தவிர பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கும் இவனது கும்பல் எச்சரிக்கை விட்டுள்ளது. சல்மான் கான், ராஜஸ்தானில் மான்களை வேட்டையாடியதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. பிஷ்னோய் இன மக்கள் சிலவகை மான்களை தங்களது தெய்வமாக கருதுகின்றனர். இது தான் சல்மான்கான் மீது பிஷ்னோய் கொதித்தெழ காரணம். பிரபல பாடகர் சித்து மூசேவாலா, கர்னி சேனா சாதிய அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் ஆகியோரை தீர்த்து கட்டியதும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல்தான். 2023ல் ராஜஸ்தானில் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.