ஆற்றில் குதித்து தப்பிய மக்கள்! என்ன நடந்தது? | Congo boat fire | Congo
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் உள்ள ஆறுகளில் படகு போக்குவரத்து முக்கிய அம்சம். போதிய சாலை வசதி இல்லாமையால் அங்கு வசிக்கும் மக்கள் படகு போக்குவரத்தை அதிகம் விரும்புகின்றனர். வடமேற்கு காங்கோவில் உள்ள மடான் குமு துறைமுகத்தில் இருந்து போலோம்பா பகுதிக்கு ஒரு மோட்டார் படகில் 500க்கும் அதிகமானோர் பயணம் செய்தனர். பன்டாக்கா என்ற பகுதியில் படகு சென்று கொண்டிருந்த போது திடீரெனெ தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எரிபொருள் இருந்த பகுதிக்கும் தீ பரவியதாக கூறப்படுகிறது. படகில் பயணம் செய்தவர்கள் உயிரை காப்பாற்ற ஆற்றில் குதித்துள்ளனர். ஒரு கட்டத்தில் படகு ஆற்றில் கவிழ்ந்து பலர் தத்தளித்தனர். விபத்தில் இருந்து தப்பிய 100 பேர் உள்ளூர் டவுன் ஹாலில் உள்ள ஒரு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. 100 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என மீட்பு படை அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் புதன்கிழமை நடந்துள்ளது. தகவல் தொடர்பு வசதியின்மை போன்ற காரணங்களால் விபத்து குறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.