உள்ளூர் செய்திகள்

கழுத்து, முதுகுவலி வந்தால் எச்சரிக்கை அவசியம்!

மன அழுத்தம் ஏற்பட காரணம்?தேவைகள், எதிர்பார்ப்புகள் இருக்கும் நேரங்களில், உடனடியாக மூளை வெளிப்படுத்தும் உணர்வு தான், 'ஸ்ட்ரெஸ்' எனப்படும் மன அழுத்தம். மாறி வரும் சூழல், வெளிப்புற சூழல், எதிர்பார்ப்புகள், விருப்பங்கள், இவற்றின் அடிப்படையில், உடலில், மனத்தில், உணர்வுபூர்வமாக வெளிப்படும் உணர்வு தான், மன அழுத்தம். எல்லா மன அழுத்தமும் மோசமானதல்ல.குறிப்பிட்ட நேரத்தில், வேலையை சிறப்பாக முடிக்க வேண்டும் என, முனைப்புடன் செயல்படும்போது ஏற்படுவது, நேர்மறையான மன அழுத்தம்.எதிர்பாராத விதமாக, அதிர்ச்சியான செய்தியை கேள்விப்படும்போது, விபத்து போன்றவற்றை பார்க்கும் போது ஏற்படுவது, அந்த வினாடியில் ஏற்படும், கடுமையான மன அழுத்தம். நீண்ட நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருப்பது, தொடர்ந்து சிக்கலான பிரச்னைகளோடு வாழ்வது போன்ற சூழலில், என்ன நடக்கப் போகிறதோ என்ற பதற்றத்தில் ஏற்படுவது எதிர் மறையான மன அழுத்தம்.வாழ்க்கை முறை முற்றிலும் மாறி விட்டதால், தேவைகளும் எதிர்பார்ப்புகளும் அதிகமாக உள்ளன. பொருளாதார வசதி, வேலை இந்த இரண்டு விஷயங்களும், தற்போதைய இளம் வயதினரை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும் முக்கிய விஷயங்களாக உள்ளன.மன அழுத்தத்தின் அறிகுறிகள் என்ன?தலைவலி, எரிச்சல், விரைவான இதய துடிப்பு, கோபம், துாக்கமின்மை, சோர்வு, அயர்ச்சி, உணர்ச்சிவசப்படுதல், கழுத்து வலி, முதுகு வலி, தற்கொலை எண்ணம்.மன அழுத்தம், உடல் மற்றும் மூளையில், என்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்?தொடர்ந்து மன அழுத்தத்திலேயே இருந்தால், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். தவிர, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு, செரிமான பிரச்னைகள், குழந்தை பேறின்மை போன்றவற்றையும் ஏற்படுத்தும். மன அழுத்தம் அதிகமாகும் போது, இயல்பாகவே, 'அட்ரினலின் ஹார்மோன்' அதிகமாக சுரந்து, இதயத் துடிப்பையும் ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கச் செய்யும். இதை சமன் செய்வதற்காக, 'கார்டிசால் ஹார்மோன்' சுரக்கும். அடிக்கடி இந்த ஹார்மோன் சுரப்பது, பல உடல் பிரச்னைகளுக்கு வழி செய்யும்.மன அழுத்தத்திலிருந்து வெளிவர யோகா உதவுமா?யோகாசனம் என்பதே, உடலும் மனமும் இணைந்து செயல்படும் ஒரு பயிற்சி. அவரவரின் தேவைக்கு ஏற்ற பயிற்சிகளை செய்யும் போது, இதயத் துடிப்பு சீராகி, ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும்; நரம்பு மண்டலமும் வலுப்பெறும்; பதற்றமும் குறையும். உடம்பு நன்றாக செயல்படுவதாக, மூளைக்கு தகவல் சென்று, எல்லாம் நல்லபடியாகவே இருக்கிறது என, மூளை நம்பும். யோகாவில் உள்ள அனைத்து ஆசனங்களும் மன அழுத்தம் மட்டுமல்ல, அனைத்து வித உடல், மன பிரச்னைகளில் இருந்தும், வெளியில் வருவதற்கு உதவும். யோகாவுடன் சேர்த்து, பயிற்சி செய்யும் மூச்சு பயிற்சியான பிராணாயாமம், தியானம், உடம்பையும் மனதையும் ஓய்வாக வைக்கும் சவாசனம் போன்றவை, மனதிற்கு அமைதியை தரக் கூடியவை. இவை, நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் திறன் கொண்டவை.உறுதி செய்யும் மருத்துவ ஆய்வுகள் உள்ளதா?சர்வதேச அளவில் பல ஆய்வுகள் இதை உறுதி செய்துள்ளன. தன் அமைப்பை தானே மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டது, மூளை என்பது, நவீன ஆராய்ச்சிகளில், புரிந்து கொள்ளப்பட்ட விஷயம். இதை மருத்துவ விஞ்ஞானிகள், 'நியுரோபிளாஸ்டிசிட்டி' என்று சொல்கின்றனர். தொடர்ந்து, ஒரு விஷயத்தை செய்யும் போது, குறிப்பிட்ட எண்ணங்கள் மீண்டும் மீண்டும் வரும் போது, அதற்கு ஏற்ப, மூளை தன்னை மாற்றிக் கொள்கிறது. எப்படி பயிற்சி தருகிறோமோ, அதுவாகவே மூளை மாறி விடுகிறது.ஒரு விஷயத்தில் தீவிரமாக, ஈடுபாட்டுடன் செயல்படும் போது, மூளை இன்னும் வலிமை பெறுகிறது. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, யோக சாஸ்திரத்தில் இது கூறப்பட்டு உள்ளது.-டாக்டர் சுபா ரவி,யோகா மற்றும் உணவு ஆலோசகர்,ஏ.வி.ஏ., சஞ்சீவனம் சிகிச்சை மையம், சென்னை.* 91766 02599


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்