UPDATED : செப் 16, 2025 11:22 AM | ADDED : செப் 15, 2025 09:44 PM
'பூமியின் சொர்க்கம்' என்று அழைக்கப்படும் காஷ்மீர் ஆப்பிள் தோட்டங்களால் நிறைந்தது. இங்கு விளையும் ஆப்பிள் பழங்கள், இந்தியாவின் பொருளாதாரத்துக்கும், ஏராளமான விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கும் முதுகெலும்பாக உள்ளன. ஆனால், இயற்கையின் சீற்றம் - வெள்ளம், நிலச்சரிவு, கணிக்க முடியாத காலநிலை மாற்றங்கள் - இப்பொழுது அந்த 'சொர்க்கத்தை' ரணப்படுத்தியுள்ளது.கடந்த வாரம் புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில், பசுமையாக விளைந்திருந்த ஆப்பிள் மரங்கள் மூழ்கின. பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆயிரக்கணக்கான ஆப்பிள்கள் கிளைகளில் பழுக்காமல் தரையில் விழுந்து கெட்டுப்போனது. இன்று, அங்குள்ள விவசாயிகள் தங்களின் கனவுகளையும் உழைப்பையும் குறித்த சாட்சியமாக, சேற்றில் விழுந்த பழங்களை எடுத்து திரட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.இந்தக் காட்சி விவசாயிகளின் உள்ளத்தை நொறுக்குகிறது. மண்ணில் விழுந்து வீணாகும் ஆப்பிளும் வெறும் ஆப்பிளல்ல அவரவர் குடும்பத்தின் கல்வி, வாழ்வாதாரம், எதிர்கால நம்பிக்கையாகும்.ஆப்பிள் காஷ்மீரின் பெருமை. நாட்டின் சந்தைகளிலும், உலகின் பல பகுதிகளிலும் தேடப்படும் இப்பழம், ஆண்டு கணக்கில் கோடிக்கணக்கான வருமானத்தை ஈட்டுகிறது. ஆனால் இந்த ஆண்டின் வெள்ளப்பெருக்கு, அந்த நம்பிக்கையை மண்ணோடு கலந்து விட்டது. ஒரு வருட உழைப்பின் பலன் சில நாட்களில் அழிந்தது.புல்வாமா விவசாயிகள் தற்போது கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்: “எங்களை யார் காப்பாற்றப் போகிறார்கள்?”அரசாங்க நிவாரணம் எப்போது வரும் என்று தெரியாது. வங்கிகளின் கடன் சுமை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இயற்கை சீற்றத்தால் ஏற்படும் இழப்புகளுக்கான காப்புறுதி இன்னும் அனைவரையும் எட்டவில்லை. இந்த சூழ்நிலையில், விவசாயிகள் தங்களின் மன உறுதியையும் குடும்பத்தின் நம்பிக்கையையும் மட்டுமே தாங்கி நிற்கிறார்கள்.ஆப்பிளின் மணம் நிறைந்த காஷ்மீர் தோட்டங்கள் இன்று வறுமையின் நிழலில் மூழ்கியுள்ளன. மண்ணின் வாசத்தோடு கலந்துவிட்ட விவசாயிகளின் கண்ணீர், நாட்டின் மனசாட்சியைத் தொட்டே ஆக வேண்டும்.ஒவ்வொரு விவசாயியும் தரையில் விழுந்த ஆப்பிளை எடுத்து அதற்கு எப்படியாவது உயிருட்டப் பார்க்கிறார்கள் காரணம் நமக்குதான் அது பழம் அவர்களுக்கு அது குழந்தையின் புத்தகத் தொகுப்பு, அவரது வீட்டின் உணவு, அவரது எதிர்கால கனவு.காஷ்மீர் விவசாயியின் கண்ணீர், நம்முடைய நாட்டுடைய கவனத்தை ஈர்த்துள்ளது.-எல்.முருகராஜ்