UPDATED : செப் 21, 2024 01:41 PM | ADDED : செப் 21, 2024 01:39 PM
இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்கின்ற தலைப்பை பார்த்துவிட்டு யாரோ ஒரு பேராசைக்காரரைப் பற்றிய பதிவோ என்று எண்ணிவிட வேண்டாம்மாற்றுத்திறனாளிகளுக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டுள்ள தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் தலைவரான சென்னை ஈக்காட்டுதாங்கலைச் சேர்ந்த சிம்மசந்திரன் பற்றித்தான் சொல்ல வருகிறேன்.நல்லபடியாக, நார்மலாக இருப்பவர்களுக்கே திருமணம் நடப்பது இன்றைய காலகட்டத்தில் சிரமமான விஷயமாகும் இந்த நிலையில் உடல் ஊனமுற்றவர்களுக்கு திருமணம் செய்துவைப்பதை தனது முதல் கடமையாகக் கொண்டுள்ளார் சிம்மசந்திரன்.இவரும் ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் மாற்றுத்திறனாளிகளின் மனதை நன்கு அறிந்துவைத்திருப்பவர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பினர் ஆங்காங்கே உள்ள திருமண வயதில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பற்றிய தகவல்களை இவருக்கு கொடுப்பர், இவர் தீர விசாரித்த பிறகு மளமளவென்று திருமண ஏற்பாடுகளில் இறங்கிவிடுவார்.தமிழக இந்து சமய அறிநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுடன் உள்ள நட்பை பயன்படுத்திக் கொண்டு அவரிடம் கோவில்களில் மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்யக்கட்டணம் வாங்காமல் இலவசமாக திருமணம் செய்துகொள்ள ஒரு உத்திரவு போடுங்கள் என்றார்.சரி என்று உத்திரவு போடப்பட்டது, கொஞ்ச நாள் கழித்து கல்யாணத்திற்கு வர்ரவங்க எங்க போய் சாப்பிடுவாங்க கோயில் அன்னதானக் கூடத்துலேயே சாப்பாடு போடச் சொல்லி உத்திரவு போடுங்க என்று கேட்டார், சரி என்று உத்திரவு போடப்பட்டது இதன்படி கோவிலில் திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளின் உறவினர்கள் ஐம்பது பேர் வடை பாயசத்துடன் கோவில் சாப்பாடு சாப்பிட்டுக் கொள்ளலாம்.சரி கோவிலில் திருமணம் செய்யும் இந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் ஏதாவது செய்ய வேண்டாமா? என்று கேட்டார் இதன் காரணமாக தாலிக்கான தங்கம் உள்பட சுமார் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை வழங்கப்படுகிறது.எல்லாம் சரி கோயில் கல்யாணம் செய்ய வர்ர பொண்ணு மாப்பிள்ளை எங்க போய் குளிப்பாங்க, டிரஸ் மாத்துவாங்க, கூட வர்ரவங்க எங்க போய் தங்குவாங்க என்று கேட்டதும் சரி என்று கோவிலுக்கு சொந்தமான கல்யாண மண்டபம் இருந்தால் அதில் தங்க தங்களை தயார்படுத்திக் கொள்ள முதல் உரிமை கொடுத்து ஒதுக்கப்பட்டது.இப்படி இது வேண்டும் இன்னமும் வேண்டும் என்று கேட்டு கேட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு கோவிலில் திருமணம் செய்து வைக்கும் சிம்மசந்திரனுக்கு ஒரு சின்ன சிக்கல் எப்போதாவது வரும்.எப்படி என்றால் மாற்றுத்திறனாளிகளாக இருப்பவர்கள் காதல் வயப்பட்டு திருமணம் செய்யும் போது அவர்கள மனதைப் பார்ப்பாரகளே தவிர மதத்தைப் பார்க்கமாட்டார்கள் அப்படி மனம் பார்த்து திருமணத்திற்கு தயரானாலும் கோவிலில் உள்ள சட்ட திட்டப்படி இந்து மதத்தினர் அல்லாதவர்களுக்கு திருமணம் செய்துவைக்க முடியாது என்பதால் அந்த மாற்றுத்திறனாளிகள் திருமணத்தை நன்கொடையாளர் உதவியுடன் வழக்கமான விருந்து சீர்வரிசையுடன் தனி மடத்தில்வைத்து திருமணம் செய்துவைத்துவிடுகிறார் சிம்மசந்திரன்.அப்படி ஒரு திருமணத்தை நேற்று சென்னையில் நடத்தினார், அன்பு அழைப்பின் காரணமாக மணமகன் ஜார்ஜ்-மணமகள் விமலா ஆகியோரின் இந்த திருமணத்தை அமைச்சர் சேகர்பாபுவே முன்னின்று நடத்தினார்.கல்யாணம்ங்கிறது மனித உயிர்களுக்கு சந்தோஷம் தரும் ஒரு உன்னத விஷயம் அது நடக்க நாம ஒரு கருவியா இருக்கோம், எல்லோரும் நல்ல சந்தோஷமா இருக்கட்டும் என்ன சொல்றீங்க?! என்றபடி தனது ஊன்றுகோலை எடுத்துக் கொண்டு திருமண வீட்டாரை கவனிக்க வெகுவேகமாக செல்கிறார்.அவர் போன திசை நோக்கி நம்மை அறியாமல் கைகள் வணங்குகிறதுசிம்மசந்திரனுடன் பேசுவதற்கான எண்:99627 11174.-எல்.முருகராஜ்