தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு அருகில் உள்ளது காசி மேஜர்புரம்.நாற்பது வருடங்களுக்கு முன் இந்தப்பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நடராஜன்-வீரம்மாள் தம்பதியினருக்கு ஒரு குழந்தை பிறந்தது.பிறக்கும் போதே ஊனத்துடனேயே பிறந்தது,இரண்டரை அடி உயரத்திற்கு மேல் வளர்ச்சி நின்றுவிட்டது,கால்களை மடக்கமுடியாது என்ற நிலையில் எங்கே போனாலும் துாக்கிக் கொண்டுதான் போகவேண்டும்,இந்த குழந்தையால் யாருக்கு என்ன பிரயோசனம், உங்களுக்கும் காலமெல்லாம் சிரமம், எங்காவது கண்காணாத இடத்தில் கொண்டு போய் விட்டுவிடுங்கள் என்று சிலர் சொல்ல, ஆயிரம் இருந்தாலும் இது எங்க பிள்ளை நாங்கள் பார்த்துக்குவோம் என்று சொல்லி அன்பும், பாசமும் அதிகமாகவே காட்டி, நெல்லை முத்துமாரி என்று பெயரிட்டு குழந்தையை வளர்த்தனர்.
தோளில் துாக்கி சுமந்த அப்பா இறந்த பிறகு பத்தாவது படிப்பிற்கு முடிவு வந்தது, வைராக்கியத்துடன் வளர்த்த தாயை வயதான காலத்தில் இனி நாம்தான் பார்க்கவேண்டும் என்ற முடிவுடன், முத்துமாரி நிற்கவும்,கம்பு ஊன்றி நடக்கவும் என்று தன் வேலைகளை தானே பார்த்துக் கொண்டு வளர்ந்தார்.உடன் ஊனமுற்றவர்களுக்கான சலுகையைப் பெற அரசு அலுவலகங்களில் ஏறி இறங்கிய அனுபவம் இவருக்கு சமூக சேவையில் நாட்டத்தை ஏற்படுத்தியது.:உடல் ஊனமுற்றவர்கள் யாராக இருந்தாலும்,, அவர்களது தகுதிக்கேற்ப அரசிடம் இருந்து என்ன, என்ன? சலுகைகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பெறமுடியும் என்பதை விளக்கிச் சொல்வதுடன்,அவர்களுக்கான மனுவை எழுதி அந்த மனுவுடன் சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து பயன் கிடைக்கும்வரை உடனிருப்பார்..இதன் காரணமாக இந்த வட்டாரத்தில் உள்ள பல உடல் ஊனமுற்றவர்கள் பலன் பெறக் காரணமாகியுள்ளார்.இப்போது உடல் :ஊனமுற்றவர்கள் என்ற எல்லையைத்தாண்டி, ஏழை எளிய மக்களின் கோரிக்கைக்காகவும் இயங்க ஆரம்பித்துள்ளார்.'நான் கடவுள்' திரைப்படம் முதல் பல்வேறு படங்களில் நடித்துள்ளார், சென்னை வந்தால் இன்னும் பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என்று சொன்ன போது, குற்றாலத்தை விட்டுவிட்டு இருக்க முடியாது ஆகவே எங்கும் இயலாது என்று உறுதியாக இருப்பவர்..சிறந்த ஆன்மீகவாதி, சித்தர்கள் பற்றி பல விஷயங்களை தெரி்ந்து கொண்டுள்ளார்,காற்றை உணவாக்கிக் கொண்டால் ஒரு நாளைக்கு ஒரு வேளை எளிய உணவு போதும் என்று சொல்லி அப்படியே வாழ்பவர்.சித்தர்கள் நமக்கு நிறைய சொல்லிச் சென்றுள்ளார்கள், குற்றாலத்தில் ஒரு குடில் அமைத்து, அங்கு ஆர்வமுடன் வருபவர்களுக்கு சித்தர்கள் நமக்கு அருளிச் சென்றுள்ள அற்புதங்களை எல்லாம் சொல்லித்தர விரும்புகிறேன், அதற்கான வாய்ப்பையும், வசதியையும் சித்தர்கள் அருள்வார்கள் என்று நம்பிக்கையுடன் கூறும் முத்துமாரியின் கனவு நனவாகட்டும்,.அவருடன் பேசுவதற்கான எண்:86374 74789.-எல்.முருகராஜ்..