உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / கொரியா சென்ற செம்பவளம்..

கொரியா சென்ற செம்பவளம்..

சுதந்திர இந்தியாவிற்கு அப்போது ஆறு வயதுதான் ஆகியிருந்தது.நாட்டை ஒரு குடையின் கீழ் கொண்டு வர நேருவும்,பட்டேலும் பிரம்ம பிராயத்தனம் பட்டுக் கொண்டிருந்தனர்.பிரிட்டிஷரால் சீரழிக்கப்பட்ட தேசத்தை துாசு தட்டி எழுப்ப போராடிக் கொண்டு இருந்தனர் நிறைய உதவியும் தேவைப்பட்டது.ஆனால் இந்த ஆறு வயதே ஆன நம் நாட்டை நம்பி ஐநா.,சபை அப்போது ஒரு பெரிய உதவியை கோரியது. கொரியாவில் அமைதியை நிலைநாட்டவேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை.ஜப்பான் ஆதிக்கத்தில் இருந்த ஒன்றுபட்ட கொரியா தன்னாட்சி பெறும் போது நாடு பிளவுபட்டது.ரஷ்யா மற்றும் சீன ஆதரவு பெற்ற இடம் வடகொரியா என்றும் அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் ஆதரவு பெற்ற மண் தென் கொரியா என்றும் பிளவு பட்டது.மூன்று ஆண்டுகள் நடந்த இந்த போர் தலைவர்கள் தலையீடு காரணமாக நின்றது ஆனால் போரின் காரணமாக கைதான போர்க் கைதிகளை திருப்பி அனுப்புவதிலும், காயம் பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை தருவதிலும் பிரச்னை ஏற்பட்டது.அப்போதுதான் அன்பு இரக்கம் கருணை மிகக்கொண்ட இந்தியாவின் துணை ஐநா.,சபைக்கு தேவைப்பட்டது விஷயத்தை விளக்கி நிலமையை சீராக்கித்தர வேண்டுகோள் விடுத்தது.சென்னையில் இருந்து 6 ஆயிரம் வீரர்கள் கொண்ட இந்திய காவல் படை (சிஎப்ஐ)ஜெனரல் திம்மையா தலைமையில் கொரியா சென்றது.அங்கு சென்று இரு நாட்டினருக்கும் பொதுவான இடத்தில் தங்கியிருந்து காயம்பட்டவர்களை நோய்வாய்ப்பட்டவர்களை சிகிச்சை வழங்கி காப்பாற்றினர் மேலும் போர்க்கைதிகள் பிரச்னையை இரு கொரியா நாட்டவரும் ஏற்கத்தக்க வகையில் செயல்பட்டு முடிவிற்கு கொண்டுவந்தனர்.இங்கு நடந்தது யுத்தம் அல்ல அமைதிக்கான யுத்திதம் மண் மக்கள் குடும்பத்தை மறந்து இந்திய அதிகாரிகள் நடத்திய இந்த மனிதாபிமானமிக்க செயல் அதிகம் அறியப்படவில்லை.ஆனால் அங்கு சென்று திரும்பிய இந்திய அதிகாரி அங்கு தனக்கு நடந்த சம்பவங்களை ஒரு டைரியாக எழுதி வைத்திருந்தார்.அவர் இறந்து பல வருடங்களுக்கு பிறகு அந்த டைரியை புரட்டிய அவரது மகள் அதில் எழுதப்பட்டிருந்த பல சம்பவங்களை படித்துவிட்டு கண்ணீர் விட்டிருக்கிறார்.மனதை உலுக்கி எடுத்த பல சம்பவங்கள் நடந்த அந்த கொரியா மண்ணிற்கு அதன் பிறகு பல முறை சென்று பல தகவல்களை புகைப்படங்களை ஆவணங்களை சேகரித்துக்கொண்டு திரும்பினார்.அந்த ஆவணங்களைக் கொண்டு பார்வதி நாயர்,நயன்தார நாயர் ஆகியோர் வித்தியாசமான கணகாட்சியினை சென்னை லலித்கலா அகாடமியில் இன்கோ சென்டர் மற்றும் போட்டோ பினாலே அமைப்பின் ஆதரவுடன் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.வருகின்ற 20 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சிக்கு அனுமதி கட்டணம் உண்டு.பார்வையாளர்கள் ஒவ்வொரு அரங்கத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டு அப்போது நடந்த விஷயங்கள் ஆங்கிலத்தில் ஒளியின் துணையோடு கதையாக சொல்கின்றனர்.தங்களது நிஜக்கதைக்கு தேவையான பழைய டெலிபோன்,டைரி,கம்பி வேலி,போட்டோக்களை அமைத்துள்ளனர்.கடல் வணிகத்தில் கோலோச்சிய தமிழர்களில் ஒருவரான செம்பவளம் என்பவர் வணிக ரீதியாக கொரியா சென்றவர் பின் அங்குள்ள மன்னரை மணந்து ராணியாகவும் மாறிவிட்டார் இதன் காரணமாக கொரியர்களின் பேச்சிலும் சில அன்றாட செயல்பாடுகளிலும் தமிழ் வாடை வீசுவதாகவும் கணகாட்சிக்கூடத்தில் ஒரு கிளைக்கதை சொல்கிறது.நமது நாட்டின் ஒரு முக்கிய வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்புவர்களும்,வித்தியாசமான கண்காட்சி அனுபவம் பெற விரும்புபவர்களும் இங்கு செல்லலாம்.மேலும் விவரங்களுக்கு 98400 13017 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை