UPDATED : செப் 03, 2024 06:40 PM | ADDED : செப் 03, 2024 06:37 PM
சென்னையில் நடந்து முடிந்த பார்முலா 4 கார் பந்தயத்தில் கலந்து கொண்டவர்களில் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்ட ஒரே பெண் பிரியங்கா ஆவார்.நீலகரி மாவட்டம் குன்னுாரைச் சேர்ந்த விஜய்கிருஷ்ணராஜ்-அன்னபூரணி தம்பதியினரின் மகளான பிரியங்கா தற்போது பெங்களூரில் பள்ளி இறுதியாண்டு படித்து வருகிறார்.சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வம் கொண்டவர், கிரிக்கெட் உள்ளீட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தாலும் அவரது மனம் கார் பந்தயங்களையே நாடியது.இதனை பெற்றோரிடம் வெளிப்படுத்திய போது அவர்கள் மகளின் ஆர்வத்திற்கு குறுக்கே நிற்காகமல் சம்மதித்தனர்.
கார் பந்தய மைதானம் தமிழ்நாட்டில் சென்னையிலும்,கோவையிலும் மட்டுமே உள்ளது,பள்ளி விடுமுறையில் வீட்டிற்கு வரும்போது கோவையில் உள்ள பந்தய மைதானத்திற்கு சென்று அகுரா என்ற பந்தய கார் ஒட்டும் நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.கோ-கார்ட்டில் ஆரம்பித்து இரண்டு வருடங்களில் படிப்படியாக தனது தகுதியை உயர்த்திக் கொண்டவர், சர்வதேச கார் பந்தய வீரர்கள் கலந்து கொள்ளும் பார்முலா 4 கார் பந்தயத்திலும் கலந்து கொள்ளும் தகுதியினையும் பெற்றார்.இதன் காரணமாக சென்னையில் நடந்த பந்தயத்தில் கலந்து கொண்டார்,இந்தப் போட்டியைப் பொறுத்தவரை ஆண்கள்,பெண்கள் பேதமின்றி பொதுவாக நடக்கும், இதில் ஆண்களுக்கு சவால் விட்டு கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒரே தமிழ்ப்பெண் பிரியங்கா மட்டுமே.இந்தப் போட்டியில் பிரியங்கா முதல் மூன்று இடத்திற்குள் வரவில்லை என்றாலும் வெற்றிகரமாக சுற்றிவந்தவர்களில் இவரும் ஒருவராவார்.
நான் வெற்றி பெறவிட்டாலும் வெற்றிக்கு பக்கத்தில் வந்திருக்கிறேன், வரும் காலத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையை பெற்றிருக்கிறேன், எனக்கு ஸ்பான்சர்கள் கிடைக்கும் பட்சத்தில் வெளிநாடுகள் சென்று போட்டிகளில் கலந்து கொண்டு தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பேன் என்றார்.-எல்.முருகராஜ்.