UPDATED : மே 29, 2026 04:51 PM | ADDED : மே 29, 2026 04:48 PM
மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனின் குடியரசில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கடற்கரை நகரமான உயிடாவில் உலகப் புகழ்பெற்ற 'மலைப்பாம்புகளின் கோயில்' அமைந்துள்ளது. மனிதர்கள் பொதுவாக அஞ்சும் ஒரு ஊர்வன உயிரினத்தை, தங்களின் ஆன்மீகக் காவலர்களாகவும், கடவுளின் தூதர்களாகவும் போற்றிப் பாதுகாத்து வரும் உலக அதிசயங்களில் இதுவும் ஒன்றாகும்.இக்கோயிலின் வரலாறு 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கி.பி. 1717- ல் அண்டை நாட்டுப் படைகள் உயிடா மீது படையெடுத்தபோது, உள்ளூர் மன்னர் 'காபாடா' தப்பித்துக் காடுகளுக்குள் ஓடினார். அப்போது அங்கிருந்த நூற்றுக்கணக்கான அரச மலைப்பாம்புகள் அவரைச் சூழ்ந்து நின்று, எதிரிகளிடம் இருந்து அவரது உயிரைக் காப்பாற்றின. தனக்கு வாழ்வளித்த அந்த பாம்புகளுக்கு நன்றிக்கடனாக மன்னர் கட்டியதே இக்கோயில்.மேற்கு ஆப்பிரிக்காவின் பூர்வீக மதமான வூடூ வழிபாட்டின் முக்கிய மையமாக இக்கோயில் திகழ்கிறது. வூடூ கலாச்சாரத்தில், இந்த மலைப்பாம்புகள் 'டங்ஃபே' என்ற மழையின் கடவுளாகவும், நல்ல அறுவடை மற்றும் ஞானத்தின் அடையாளமாகவும் வணங்கப்படுகின்றன.இக்கோயிலில் விஷமற்ற 'பால் பைத்தான்' எனப்படும் சிறிய வகை மலைப்பாம்புகள் மட்டுமே வளர்க்கப்படுகின்றன. வேறு எந்தவொரு விஷப்பாம்புகளோ அல்லது பிற வகை பாம்புகளோ அங்கே அனுமதிக்கப்படுவதில்லை. இவை முழுமையாக வளர்ந்தாலும் அதிகபட்சமாக 4 முதல் 5 அடி நீளம் மட்டுமே இருக்கும். மனிதர்களைக் கண்டால் கடிக்காமல், பந்து போலச் சுருண்டுகொள்ளும் சாதுவான குணம் கொண்டவை.இந்த பாம்புகளால் ஆடு, முயல் போன்ற பெரிய விலங்குகளை முழுங்க முடியாது. இவற்றுக்குக் கோயிலில் தனியாக எந்த உணவும் வழங்கப்படுவதில்லை. இப்பாம்புகள் இரவு நேரத்தில் கோயிலை விட்டு வெளியேறி, அருகில் உள்ள வீடுகள் மற்றும் காடுகளுக்குள் சென்று அங்குள்ள எலிகள், தவளைகள், பள்ளிகளை வேட்டையாடிச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் கோயிலுக்கே திரும்பி வந்துவிடுகின்றன.இந்தியக் கோயில்களைப் போலப் பெரிய கோபுரங்கள் இல்லாமல், ஒரு சாதாரண வீட்டின் அளவிலேயே இக்கோயில் அமைந்துள்ளது. இதன் மையப்பகுதியில் உள்ள ஒரு சிறிய, கூரையற்ற அறையில்தான் சுமார் 50 முதல் 60 மலைப்பாம்புகள் ஒன்றாகப் வாழ்கின்றன.இரவில் நகருக்குள் உலவ வரும் பாம்புகளை உள்ளூர் மக்கள் மிகவும் மரியாதையுடன் கையாளுவார்கள். ஒருவேளை பாம்பு வீடுகளுக்குள் சென்றால், அதை மெதுவாக அள்ளி எடுத்து மீண்டும் கோயிலிலேயே கொண்டு வந்து விட்டுவிடுவார்கள். ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்த பாம்புகளுக்காகப் பெரிய திருவிழா மற்றும் தூய்மைப்படுத்தும் சடங்குகள் நடத்தப்படுகின்றன.கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அங்குள்ள பயிற்சி பெற்ற வழிகாட்டிகள் வரவேற்று, பாம்புகளைப் பற்றிய பயத்தைப் போக்குகின்றனர். சுற்றுலாப் பயணிகள் இந்த பாம்புகளைத் தொட்டுப் பார்க்கவும், தங்களின் கழுத்தில் மாலையாக அணிந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.இக்கோயில் வூடூ மதக் குருமார்கள் மற்றும் பாரம்பரியத் தலைவர்களால் பரம்பரையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. பெனின் அரசாங்கம் இக்கோயிலை நேரடியாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிட்டாலும், இது நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலம் என்பதால் நிதியுதவியும், முழுமையான ஆதரவும் வழங்குகிறது.பல நூற்றாண்டுகளாக இக்கோயில் இருந்தாலும், பாம்புகளின் எண்ணிக்கை 100-க்குள்ளேயே இருப்பதற்கு இயற்கையின் உணவுச் சங்கிலியே காரணம். இவை காடுகளுக்குச் செல்லும்போது பருந்துகள் போன்ற பிற விலங்குகளால் வேட்டையாடப்படுகின்றன. மேலும், இந்த வகை பாம்புகள் வருடம் ஒருமுறை மிகக் குறைந்த அளவிலேயே (4 முதல் 11) முட்டையிடும் என்பதால், இவற்றின் எண்ணிக்கை இயற்கையாகவே சமநிலையில் உள்ளது.-எல்.முருகராஜ்