உள்ளூர் செய்திகள்

பசுமையாகும் பிரிட்டன்

சூரிய ஒளி, காற்று போன்ற குறைவுபடாத மூலப்பொருட்களில் இருந்து மின்சாரம் தயாரிப்பதை பசுமை ஆற்றல் என்று குறிப்பிடுகிறோம். பெட்ரோல், நிலக்கரி போன்ற தீர்ந்துவிடக் கூடிய மூலப்பொருட்களின் மூலம் பெறப்படும் மின்னாற்றல் சுற்றுச் சூழலை மாசுபடுத்தக் கூடியதாகவும், உலகின் வெப்பநிலையை உயர்த்துவதாகவும் (Global Warming) இருக்கிறது. இதனால் பசுமை ஆற்றல் பயன்பாட்டை உலக நாடுகள் பலவும் அதிகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் பிரிட்டன் 2017ஆம் ஆண்டில் பசுமை ஆற்றலில் புதிய உச்சங்களை தொட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.2012ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் தொடர்ச்சியாகப் பசுமை ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்கும் வழிமுறைகளில் ஈடுபட்டு வந்தது. உலக அளவில் பசுமை ஆற்றல் விநியோகத்தில் ஏழாவது இடத்திலும், ஐரோப்பிய ஒன்றிய அளவில் நான்காவது இடத்திலும் இருக்கும் பிரிட்டன், தனது கார்பன் வெளியேற்றத்தை முன்பைவிட சரிபாதி அளவு குறைத்துள்ளது.மைகிரிட்--ஜிபி(MyGridGB) எனும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வொன்று 2017ஆம் ஆண்டின் 90% நாட்களில் பசுமை மின்சாரத்தின் அளவு நிலக்கரியால் தயாராகும் மின்சாரத்தை விட அதிகமாக இருந்ததாகத் தெரிவிக்கிறது. தொழிற்புரட்சி காலகட்டத்திலிருந்தே நிலக்கரி மூலம் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தையே அதிகம் பயன்படுத்தி வந்த பிரிட்டன், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு முழு நாள் பசுமை ஆற்றலைக் கொண்டே இயங்கி சாதனை படைத்தது.2025ஆம் ஆண்டில், நிலக்கரி பயன்பாட்டிலிருந்து முழுமையாக வெளியேறும் லட்சியத்தை நோக்கிய பிரிட்டனின் பயணத்தில் 2017ஆம் ஆண்டு ஒரு முக்கிய மைல் கல்லாகும். அதே நேரம், பிரிட்டன் எரிவாயுவை அதிகம் பயன்படுத்துவது குறித்து மைகிரிட்-ஜிபி அமைப்பின் ஆய்வுகள் கவலை தெரிவித்துள்ளன. அவ்வமைப்பைச் சேர்ந்த ஆண்ட்ரூ (Dr Andrew Crossland), எரிவாயு பயன்பாட்டைக் குறைக்காவிடில் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை ஏற்றம் பிரிட்டனை கடுமையாக பாதிக்கும் என்றும், மாற்று எரிபொருட்களை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.பிரிட்டன் அரசின் ஆற்றல் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மற்ற G7 நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளோடு ஒப்பிடுகையில், அந்நாட்டின் கார்பன் வெளியீடு மிகவும் குறைவே என்றும், பசுமையான உலகை அமைப்பதில் பிரிட்டன் என்றும் உலகிற்கு வழிகாட்டும் என்றும் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !