பத்திரிகையாளர்களின் முன்னோடி!
ஜோசப் புலிட்சர்அமெரிக்கப் பத்திரிகையாளர்10.4.1847 - 29.10.1911ஹங்கேரிஉலக அளவில் இசை, இலக்கியம், பத்திரிகை போன்ற துறைகளில் சாதிப்பவர்களுக்கு, அமெரிக்கா வழங்கும் புகழ்பெற்ற விருது, 'புலிட்சர்'. இந்தப் பரிசை ஏற்படுத்தியவர், ஜோசப் புலிட்சர்!17 வயது இளைஞராக இலண்டனுக்கு வந்து, பிரிட்டிஷ் இராணுவத்தில் சேர முயன்றார். அதற்கு ஏற்ற உடலும் பார்வைத் திறனும் இல்லாததால் நிராகரிக்கப்பட்டார். ஜெர்மன், பிரெஞ்சு, ஹங்கேரியன், ஆங்கில மொழிகளில் வல்லவராக இருந்தார். அதன்மூலம், ஜெர்மானியப் பத்திரிகை ஒன்றின் நிருபராகி, 24வது வயதில் அப்பத்திரிகையின் உரிமையாளர்களில் ஒருவரானார். நாளடைவில், இரு வேறு ஆங்கில நாளிதழ்களை விலைக்கு வாங்கி, இணைத்து, 'செயின்ட் லுாயி போஸ்ட் டெஸ்பாட்ச்' (St. Louis Post- Dispatch) என்ற தினசரியாக்கி நடத்தினார். பின்னர், 'நியூயார்க் வேர்ல்ட்' என்ற பத்திரிகையை வாங்கினார். அதில், கதைகள், செய்திகள், கிசுகிசு, கார்ட்டூன், விளையாட்டுச் செய்திகள், போட்டிகள் என உருவாக்கி இதழியல் துறைக்கு நவீன வடிவத்தைத் தந்தார். 40 வயதுக்குள் அமெரிக்காவின் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆகிவிட்டார். ஆனால், தன் பார்வையை முற்றிலுமாக இழந்திருந்தார். ஆனாலும், உதவியாளர்களின் துணையோடு இயங்கியவர், அறக்கட்டளை ஒன்றையும் உருவாக்கினார். பத்திரிகைத்துறையில் நெறிமுறைகளை உருவாக்கி, பத்திரிகையாளர்களுக்கு முன்னோடியாக இருக்கிறார் ஜோசப் புலிட்சர்!