கடற்கரையில் நெற்பயிர் வளருமா?
ஆம்! சாத்தியமே! ஆனால் ஒரு பிரச்னை இருக்கிறது. கடல் அருகில் உள்ள மண் மற்றும் நீரில் இருக்கும் அதிக உப்புத்தன்மையால், விளைச்சல் மிகக் குறைவாக இருக்கும். தமிழ்நாட்டை 2004இல் சுனாமி தாக்கியபோது, கிழக்குக் கடற்கரைப் பகுதியை ஒட்டியிருந்த நெல் வயல்கள் கடல்நீரால் சூழப்பட்டன. இனி, அந்த நிலம் எதற்கும் பயன்படாமல் ஆகிவிடும் என்று நம்பப்பட்டது. இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார், கொழிஞ்சி உள்ளிட்ட சில தாவரங்களை அங்கு வளரச்செய்தார். அவற்றை மடக்கி உழுது அந்த மண்ணை வளப்படுத்தி, மீண்டும் நெல்விளையும் பூமியாக மாற்றிக்காட்டினார். சீனத்தின் 'கலப்பின அரிசியின் தந்தை' என்று புகழப்படுபவர், ஆராய்ச்சியாளர் யுவான் லாங்பிங். இவரது தலைமையிலான குழு கடல்நீரைப் பாய்ச்சினாலும் வளரும் நெல் ரகத்தைக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கியுள்ளது. இந்த நெல்லில் அதிக அளவில் கால்சியம் இருப்பதும் உறுதியாகியுள்ளது.- பாசன்