தீயணைக்கும் தூள்!
நெருப்பினால் ஏற்படும் விபத்துகள் உயிரிழப்பையும், பொருளாதார சேதத்தையும் ஏற்படுத்துகின்றன. செயற்கைக்கோள்களில் தீவிபத்துகள் ஏற்படாமல் இருக்கவும், உடனடியாக நெருப்பை அணைக்கவும் தேவையான தொழில்நுட்பங்கள் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இஸ்ரோவும் அத்தகைய முயற்சியில் ஈடுபட்டு தீயணைக்கும் தூளை (fire extinguishing powder) உருவாக்கி உள்ளது.ஆல்பெக்ஸ் (OLFEX) இது யூரியா மற்றும் பொட்டாசியம் பைகார்பனேட் வேதிப்பொருட்களின் கலப்பு. தீவிபத்துகளிலேயே மிக மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடியவை, எண்ணெய் (Oil) மற்றும் வாயுக்களால் (Gas) ஏற்படும் தீவிபத்துகள் தான். இவற்றைக் கட்டுப்படுத்த ஆல்பெக்ஸ் பயன்படுகிறது. இஸ்ரோவின் கண்டுபிடிப்பான ஆல்பெக்ஸ் தூளை உருளைகளில் சேகரித்து, தேவையானபோது பயன்படுத்திக் கொள்ளலாம். வெறும் ஆறு கிலோ எடைகொண்ட தீயணைப்புக் கருவிகளில், இத்தூள் நிரப்பப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இதற்கு 'தூள் தீ அணைப்பான், என்றே பெயர்.தீவிபத்து வாய்ப்புள்ள தொழிற்சாலைகளில் பயன்படுத்த 25 கி.கி. எடைகொண்ட உருளைகளாகவும் கிடைக்கிறது. இத்தூளினால் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ பாதிப்பு ஏற்படுவதில்லை என்பதுதான் சிறப்பு. டெர்னரி யூடெக்டிக் க்ளோரைட் (Ternary Eutectic Chloride (TEC) டெக் தூள், உலோகங்களால் ஏற்படும் தீவிபத்துகளின்போது சிறப்பாகச் செயற்படுகிறது. மக்னீசியம், அலுமினியம் மற்றும் சோடியம் போன்ற உலோகங்களால் ஏற்படும் தீவிபத்துகள் பெரும் சேதங்களை ஏற்படுத்தக்கூடியவை. டெக் தூள் இத்தகைய விபத்துகளின்போது, சிறப்பாகச் செயற்படுவது பலமுறை நிரூபணமாகி உள்ளது.இஸ்ரோவின் கண்டுபிடிப்புகளான இந்த இரண்டு பொருட்களுமே, இன்று பல்வேறு தனியார் தொழிலகங்களால் தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்கப்படுகின்றன.இவற்றின் மூலம் தீவிபத்துகளால் ஏற்படும் உயிர் மற்றும் பொருட்சேதங்கள் பெருமளவு குறைந்துள்ளன.- பாசன்