உள்ளூர் செய்திகள்

சரித்திரம் பழகு: யார் இந்த மன்னர்?

சிதம்பரம் நடராஜர் கோயில் வடக்கு கோபுரத்தில் உள்ள சிலை இது. இவர் ஒரு பேரரசர். இந்தக் கோபுரத்தைக் கட்டியவரும் இவரே. தென்னிந்தியா முழுவதும் இவரது ஆதிக்கம் இருந்தது.1487இல் பிறந்த இவர், 22ஆம் ஆண்டில் அரசரானார். 1509 முதல் 1530ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தார்.கலிங்க நாட்டு கஜபதியை வென்று, அங்கு வெற்றித் தூண் எழுப்பினார். தக்காண சுல்தான்களுக்குச் சிம்மசொப்பனமாக விளங்கினார். தான் வென்ற நாட்டு மக்களை இவர், கொடுமைப்படுத்தியது இல்லை.'நடுத்தரமான உயரம் கொண்டிருந்தார். நிறமும் தோற்றமும், வசீகரமாக இருந்தன. அதிகச்சதைப்பற்று இல்லாமலும், ஒல்லியாக இல்லாமலும் இருந்தார். உடம்பில் அம்மை வார்த்த தழும்புகள் இருந்தன. முகமலர்ச்சியும், கண்ணிற்கு இனிமையான காட்சியும் உடையவர்' என்று, வெளிநாட்டவர் இவரைப் பற்றிக் குறிப்புகள் எழுதி வைத்துள்ளனர்.முன் கோபம் உடைய அரசரான இவர், அதன்பிறகு வருத்தப்படுவார். 'பிரதாப, சதுர்சமுத்திராபதி' உள்ளிட்ட பட்டப்பெயர்கள் இவருக்கு இருந்தன.இவரது அரசவையில் அல்சானி, பெத்தன்னா உட்பட எட்டு கவிஞர்கள் இருந்தனர். அவர்கள் அஷ்டதிக்கஜங்கள் என்று அழைக்கப்பட்டனர்.திருப்பதி பெருமாள், இவருடைய விருப்பத்திற்குரிய கடவுள். அந்தக் கோயிலுக்கு நிறைய நிவேதனங்கள் செய்தார். அந்தக் கோயிலில் இரு மனைவியருடன் இவர் இறைவனை வணங்கியபடி நிற்கும் செப்புச் சிலைகள் உள்ளன.போர்ச்சுகீசியர்களிடம் நிறைய குதிரைகளை வாங்கி, படைபலத்தை அதிகப்படுத்தினார். அதனால் தென்னிந்தியாவில் இவரது வம்சத்தினர் எழுப்பிய பல கோயில்களில், குதிரை வீரர்களின் சிலைகள் இருக்கும்.இவரது தாய்மொழி கன்னடம். ஆனால், இவர் திருப்பாவை எழுதிய ஆண்டாளின் சரித்திரத்தை 'ஆமுக்தமால்யதா' என்று தெலுங்கில் எழுதினார். தெனாலிராமன் இவரது அவையில் தான் இருந்தார்.ஹம்பியைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்த பெருமைக்குரிய மன்னர் இவர்.விடைகள்: கிருஷ்ணதேவராயர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !