பசி, பிணி, விடுதலை
தாது வருஷப் பஞ்சத்திலே ஓ சாமியேதாய் வேற பிள்ளை வேற!காட்டுப் பக்கம் நூறு பிணம் ஓ சாமியேமேட்டுப் பக்கம் நூறு பிணம்!ஆத்திலேயும் தண்ணியில்லை ஓ சாமியேகுளத்திலேயும் தண்ணியில்லை!தண்ணித் தாகத்தால் வறண்டு ஓ சாமியேதவறானது (இறந்தது) கோடி சனம்கஞ்சியில்லாது தவித்து ஓ சாமியேகாட்டில் மாண்டது கோடி!இது ஒரு நாட்டுப்புறப் பாடல். தாது வருடத்தில், இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சத்தின் கொடுமையைப்பற்றி விளக்கும் பாடல்.'தாய் வேற, பிள்ளை வேற' என்ற வார்த்தைகளே, பஞ்சத்தில் பாசம், அன்பு எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்பதைக் காட்டுகிறது. உணவுக்காக பெற்ற மகன்களையே பெற்றோர் விற்கும் கொடுமை நடந்தது. ஆண்கள், மனைவியரை அடகு வைத்தனர். பாதையோரங்களில் இறந்தவர்களுக்கு ஈமக் கடன்கள் செய்யக்கூட ஆளில்லாத நிலை ஏற்பட்டது. பிணங்களை அகற்ற முடியாத நிலையில், தொற்றுநோய் ஏற்பட்டு மக்கள் இன்னும் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். பொன்கொடுத்து நெல் வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். இதற்குக் காரணம் நம்மை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள்தான். அவர்களின் நிர்வாகச் சீர்கேட்டினால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு, மக்கள் மடிந்தனர். அத்துடன், இங்குள்ள மக்கள் எக்கேடு கெட்டால் என்ன? தங்கள் நாடு செழிப்புற வேண்டும் என்ற எண்ணம், ஆங்கிலேயருக்கு இருந்தது. அவர்கள் இந்தியாவின் அரிசி, கோதுமைப் பொருட்களை அதிகமாக இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்தனர். இதனாலும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. அதிக வரிவிதிப்பின் காரணமாகவும் இது நிகழ்ந்தது. விளைச்சல் அனைத்தும் வரிக்கே சென்றதால், உழுதவனுக்கு உணவில்லாமல் போனது.இந்தியாவில் ஏற்பட்ட முக்கிய பஞ்சங்கள் மூன்று. அதில் ஒன்றுதான். தாது வருடப் பஞ்சம். இது, 1876 - 78ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டது. மீதி இரண்டும் வங்காளப் பஞ்சம். அது, 1770, 1943- - 19-44 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்டது. தாது வருடப் பஞ்சத்தின்போது, சென்னை மாகாணத்தில் (தமிழ்நாடு) ஆந்திரப் பகுதியும் இருந்தது. கர்நூல், நெல்லூர், செங்கல்பட்டு, சேலம், கோயம்பத்தூர், திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்கள் (ஜில்லாக்கள்) கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதன் பாதிப்பு, பல ஆண்டுகளுக்கு நீடித்தது. 'பசி வந்திட பத்தும் பறந்து போகும்' என்பார்கள். செயற்கையாகப் பஞ்சத்தை உருவாக்கினால், இந்தியர்கள் உணவுக்கே திண்டாடுவார்கள், அலைவார்கள். பிறகு நாட்டுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராட மாட்டார்கள் என்ற ஆங்கிலேயரின் தீய எண்ணமே, இப்பஞ்சங்களுக்கு மூல காரணம்.