கப்பலோட்டிய அரசர்
கலம் என்றால் கப்பல். கடலில் கப்பல்கள் பல செலுத்திய அரசர் யார்? அவர் ஒரு சோழ மன்னர். சிறுவயதில் அவருக்கு மதுராந்தகன் என்று பெயர். அரசனாக முடிசூட்டிக்கொள்ளும்போதுதான் தன்னுடைய பெயரை மாற்றி வைத்துக்கொண்டார். அவர் வெட்டிய ஏரிக்கு 'சோழ கங்கம்' என்றொரு பெயர் உண்டு.இப்போது கண்டுபிடித்து விட்டீர்களா? ஆம், அவர் முதலாம் ராஜேந்திரசோழன்!தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ராஜராஜ சோழனின் மகன் இவர். கி.பி.1014ல் சோழ நாட்டிற்கு மன்னர் ஆனார்.'தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்' என்று ஒரு பழமொழி உண்டு. ராஜேந்திர சோழன் விஷயத்தில் அது பொருந்தும். அப்பா ராஜராஜனைவிட, மகன் ராஜேந்திரன் திறமைசாலி. ராஜேந்திரன் படை இன்றைய ஜாவா, சுமத்ரா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இலங்கை, இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கெல்லாம் சென்று வென்றது. கடல் கடந்து படையெடுத்து வென்றதால் 'அலைகடல் மீது பல கலம் செலுத்திய' அரசர் என்று புகழப்படுகிறார். கடலின் தன்மை, காற்றின் தன்மை போன்றவை ராஜேந்திரனுக்குத் தெரிந்து இருந்தது. ஆமைகள் போகும் நீரோட்டப் பாதை பார்த்து, வழி அறியும் திறனும் பெற்றிருந்தாராம்.கி.பி. 1014 முதல் 1044ஆம் ஆண்டு வரை முப்பதாண்டு காலம் இவரது ஆட்சி நடந்தது. வடக்கே வங்காளம் வரை படையெடுத்துச் சென்ற ராஜேந்திரன், தன்னிடம் தோற்ற அரசர்களை, தலையில் கங்கை நீர் சுமந்து வரச் செய்தார். புதிதாக ஓர் ஏரியை வெட்டச் செய்து அந்த ஏரியில் கங்கை நீரை ஊற்றினார். அந்த ஏரிதான் சோழ கங்கம். அது சோழப் பேரேரி என்றும் (தற்போது பொன்னேரி) அழைக்கப்பட்டது. ஏரியை ஒட்டி ஒரு நகரை உருவாக்கினார். அதைத் தன் தலைநகராகவும் ஆக்கிக்கொண்டார். அந்த நகரம்தான் கங்கை கொண்ட சோழபுரம். ராஜேந்திரன் அரசனாகப் பதவி ஏற்ற ஆயிரமாவது ஆண்டு விழா 2014இல் கொண்டாடப்பட்டது.