உள்ளூர் செய்திகள்

கீறலற்ற கண்ணாடிகள்

1980களில் ஜேம்ஸ் பி ஸ்டீபென்ஸ் (James B Stephens) சார்லஸ் ஜீ மில்லர் (Charles G Miller) என்னும் இரு விஞ்ஞானிகள் ஓர் ஆய்வில் இறங்கினர். விண்வெளியில் சந்திக்கும் லேசர் கதிர்கள் (laser), பற்றவைத்தல் (welding) ஆகிய தொழில்களில் உருவாகும் ஒளிக்கதிர்கள் ஆகியவை மனிதர்களின் கண்களைப் பாதித்தன. இவற்றில் இருந்து கண்களைக் காப்பாற்ற, இவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கழுகுகளின் கண்கள் பற்றிய செய்தி அவர்களை ஈர்த்தது. சூரிய ஒளிக்கதிர்களிலிருந்து, அவற்றின் கண்களைக் காக்க இயற்கையாகவே ஒருவித எண்ணெய்ப்பசை சுரந்து வருவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த எண்ணெய் நீலம், ஊதா, புற ஊதாக்கதிர்களைத் தடுத்து, பார்வையைக் கூர்மையாக்கும். இதே இயற்கைப் பாதுகாப்பை மனிதர்களுக்கும் அளித்தால் என்ன? ஜெட் புரொபல்ஷன் லேப்பில் (Jet Propulsion Laboratory) பணிபுரிந்த பிற ஆய்வாளர்களின் உதவியை இவர்கள் நாடினர். அதீத வெளிச்சம் ஏற்படுத்தும் குறைபாட்டைத் தடுக்கும் புதுவகைக் கண்ணாடிகளைத் தயாரிக்க முயன்றனர். கணினி மூலம் மலைப்பகுதிகள், பாலைவனங்கள், ப்ளாரெஸெண்ட் (fluorescent) வெளிச்சம் அதிகமுள்ள அலுவலகங்கள் ஆகிய இடங்களுக்குத் தனித்தனியே துல்லியமான ஒளிக்கதிர் தடுப்புகளை உருவாக்கினர். இவை கீழே விழுந்தாலும், எளிதில் உடையாது; கீறலும் ஏற்படாது. ஸன்-டைகர் (SunTiger) என்னும் நிறுவனத்தின் மூலம், இவை தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டன. - குழலி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !