முத்தை உருக்கும் திரவம்
நாம் மாலைகளிலும் மோதிரத்திலும் பதித்துக்கொள்ளும் கெட்டியான முத்து, ஒரு திரவத்தில் கரைந்துவிடும். ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா? அந்தப் புளிப்பு திரவத்தின் பெயர், 'வினிகர்' (Vinegar). உணவுப் பொருள் தயாரிப்பில் பயன்படும் அதே வினிகர்தான்! பல நூற்றாண்டுகளாக திராட்சை, பெர்ரி, தேன், உருளைக் கிழங்கு, வேறு சிலவகை தானியங்கள் ஆகியவற்றில் இருந்து வினிகர் தயாரிக்கப்பட்டு வருகிறது.வினிகரின் வேதியியல் பெயர் அசிட்டிக் அமிலம் (Acetic Acid). இது எங்கே, எப்படி பயன்படுகிறது என்பதைப் பார்ப்போம்.தேவையற்ற செடிகள், புற்களை அழிக்க வினிகரைத் தெளிக்கலாம். வீட்டிற்குள் எறும்புகள் அண்டவிடாமல் இருக்க கதவு, ஜன்னல் இடுக்குகளில் வினிகர் 'ஸ்பிரே' பயன்படுகிறது.புதிதாக சுவர்களில் வண்ணம் தீட்டும் போது பெயின்ட் வாசனை சில நாட்களுக்கு இருந்துகொண்டே இருக்கும். ஒரு கோப்பையில் ஆவியாகி குளிர வைத்த ஒரு ஸ்பூன் வினிகரை (distilled vinegar) ஊற்றி வைத்தால் பெயிண்ட் வாசனை போயே போச்!சில வகை மண்ணுக்கு இரும்புச் சத்து தேவைப்படும். அது போன்ற இடங்களில் தண்ணீருடன் வினிகரைக் கலந்து ஊற்றினால் போதும். சில வகை உணவு, குளிர்பானங்கள் தயாரிப்பில் வினிகர் சேர்க்கப்படுகிறது.சீனா பீங்கானில் இருக்கும் காபி, டீ கறைகளை உப்பு நீருடன் கொஞ்சம் வினிகர் கலந்து துடைத்தால் பீங்கான் பளிச் ஆகிவிடும். மூக்குக் கண்ணாடியில் இருக்கும் அழுக்குகளை அகற்றவும் இது பயன்படும். காய்கறிகள் வதங்காமல் இருக்க வினிகர் கலந்த நீரில் நனைத்து வைக்கிறார்கள்.வினிகர் என்ற வார்த்தை 'வின் அக்ரே' (vin aigre) என்ற பிரெஞ்சு வார்தையில் இருந்து பெறப்பட்டது. இதற்கு புளிப்பு மது? என்று பெயர்.