நீரின்றி அமையாது உலகு
வேகமாக வளரும் மக்கள்தொகை, குறைவான நீர் ஆதாரங்கள் ஆகிய இரண்டுக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்நிலை நீடித்தால், 2050ல் உலகின் மக்கள்தொகையில் 25 சதவீதம் பேருக்கு, சுத்தமான குடிநீர் கிடைக்காது. மக்கள்தொகை நெரிசல் மிகுந்த நாடுகள், அதிகம் பாதிப்புக்கு ஆளாகக்கூடும்.சரியான முறையில் நீர்வளத்தை பங்கிட்டுக்கொள்வதே, வருங்காலத்தில் உலக அமைதிக்கான வழியாக இருக்கும் என்று, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அண்டானியோ குட்டெர்ஸ் தெரிவித்துள்ளார். நீர் வளங்களைப் பயன்படுத்தும் முறையில் உள்ள அலட்சியத்தைப் போக்கி, நீரைச் சேமிக்க ஆரம்பிக்காவிட்டால், 2025லிருந்தே குடிநீர்ப் பஞ்சம் உலகில் ஆரம்பமாகிவிடும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.சோமாலியா, நைஜீரியா போன்ற நாடுகளில் ஏற்கெனவே குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. இப்போதைய நிலவரப்படி உலகெங்கும் 800 மில்லியன் மக்கள் குடிநீர்ப் பஞ்சத்தால் அவதிப்படுகிறார்கள். நீர்வளங்களைப் பாதுகாப்பதும், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதுமே, இன்று நம்முன் உள்ள முக்கியக் கடமைகளாகும்.