தமிழ் நீட்டும் உயர்வு தரும்!
இந்தியாவில் அமலாகியுள்ள நீட் தேர்வு பற்றி இன்று வரை சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள், நீட் தேர்வு பற்றிக் கலங்காமல் களமிறங்கி, தேர்ச்சி பெற்று வருகிறார்கள். தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களும், நீட் தேர்வை நம்பிக்கையுடன் எழுதி வருகின்றனர். இந்த ஆண்டு தமிழ்வழியில் படித்து, நீட் தேர்வில் வெற்றிபெற்று தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்துள்ள மாணவி நந்தினியிடம் பேசினோம். “நான் தமிழ்வழி கல்வியில்தான் படித்து நீட் தேர்வு எழுதினேன். மருத்துவப் படிப்பில் சேர போட்டிகள் இருக்கும் என்பதை முன்னமே புரிந்து கொண்டேன். கடந்த ஆண்டு நான் பிளஸ் 2 முடித்துவிட்டு, உடனடியாக நீட் தேர்விற்கான பயிற்சியில் சேர்ந்துவிட்டேன். தேனி மாவட்டம், கூடலூரில் உள்ள, அரசு உதவிபெறும் என்.எஸ்.கே.பி. (NSKP) உயர்நிலைப் பள்ளியில் மேல்நிலைக் கல்வியைப் படித்தேன். படிப்பு முடிந்ததும் தமிழ்வழியில் எங்கெல்லாம் நீட் தேர்விற்குப் பயிற்சி கொடுக்கிறார்கள் என்பதைத் தேடிவந்தேன். அதில் நல்ல வகுப்பு ஒன்றில் சேர்ந்து பயிற்சி பெற்றேன்.காலை 5:30 மணிக்கு படிக்கத் தொடங்குவேன். இரவு 10:30 வரை வகுப்புகள், தேர்வுகள் என நேரம் ஓடும். இடையிடையே சில மணிநேரம் ஓய்வும் எடுப்பேன். தமிழ்வழிக் கல்வியில் படித்தாலும், ஆங்கிலத்தையும் புரிந்துகொள்ள ஆங்கிலப் பாடப் புத்தகங்களையும் படிப்பேன். ஒரு பாடப்பிரிவுக்கு ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் நம்பாமல் பல புத்தகங்களைப் படித்து, சந்தேகங்களை உடனே கேட்டுத் தெளிவு பெறுவேன். ஓராண்டு முழுவதும் நேரத்தை வீணாக்காமல் பயன்படுத்தினால், நிச்சயம் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். நான் பள்ளியில் இரண்டாம் இடம் பெற்றிருந்தாலும், நீட் தேர்வு எழுதுவது என்றவுடன் பயமாக இருந்தது உண்மைதான். ஆனால், என்னை நானே தேற்றிக்கொண்டு, தமிழில் 'நீட்' தேர்வு எழுதத் தயாரானேன். என்னுடைய நோக்கம் முழுவதும் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதாகவே இருந்தது. நினைத்ததை முயற்சியின் மூலம் சாதித்து நீட்டில் 529 மதிப்பெண்கள் பெற்றேன். உங்களுடைய கனவில் உறுதியாய் இருந்தால் நிச்சயம் ஜெயிப்பீர்கள்' என்றார் நந்தினி.