இதுதான் எனக்குரிய பெயர்!
எழுத்தாளர்கள் மட்டுமன்றி பலருக்கும் இங்கே இரட்டைப் பெயர்கள் உண்டு. வீட்டில் ஒன்று; வெளியில் ஒன்று என பெயர் உள்ளவர்கள் அதிகம். அதிலும் பலருக்கும் தங்கள் பெயர் பிடிப்பதில்லை. இன்னொரு பெயர் இருந்திருக்கலாம் என்றோ, இந்தப் பெயர் இருந்திருக்கலாம் என்றோ சிந்திப்பதுண்டு. இதுபற்றி இன்றைய மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளவே, 'இதுதான் எனக்குரிய பெயர்! என நீங்கள் மாற்றிக் கொள்ள விரும்பும் பெயர் என்ன? ஏன்?' என்று கேட்டிருந்தோம்.கோவை, சிங்காநல்லுார், வெங்கடலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 9ஆம் வகுப்பு மாணவர்களின் கருத்தறிய நேரில் சந்தித்தோம். ச.சஞ்ஜெய்என் அம்மா, சித்தார்த்தன் என்ற பெயரைத் தான் முதலில் தேர்வு செய்திருந்தார். இது, புத்தரின் இயற்பெயர் என்பதால், நானும் துறவறத்திற்குச் சென்றுவிடுவேனோ என்ற வாதங்கள் எல்லாம் வீட்டில் எழுந்தனவாம். பின்புதான், எந்தச் செயலையும் ஆராய்ந்து செய்பவன் என்ற பொருள்படும் சஞ்ஜெய் என்ற பெயருக்குச் சொந்தக்காரன் ஆனேன். அப்பாவின் முழுப் பெயரையும் என் பெயருக்குப் பின்னால் இணைத்து, சஞ்ஜெய் சந்திரசேகரன் என மாற்றிக் கொள்ள விரும்புகிறேன். ச.ஹரிஹரசுதன்என் பெயர்சூட்டு விழாவின் கதையை அம்மா இப்போதும் கூறுவதுண்டு. அப்பா சபரீஸ்வரன் என்றும், மாமா ஹரிஹரசுதன் என்ற பெயரையும் தேர்வு செய்தனராம். கடைசியில், மாமா தேர்வு செய்த பெயரையே சூட்டிவிட்டனர். இதில் வட எழுத்துகள் உள்ளன. எனக்குத் தூய தமிழ்ப் பெயர்கள் பிடிக்கும். தூய தமிழ்ப்பெயர் ஏதாவது கிடைத்தால், அப்போது பெயரை மாற்றிக் கொள்வேன். இப்போதைக்குத் தொல்காப்பியன் என்னும் பெயர் பிடித்திருக்கிறது.சு.ஸ்வேதா:ஸ்வேதா என்றால் தூய்மை, வெண்மை என பொருள். வெண்மை என்பது அமைதியின் அடையாளம். என் இயல்பும் அதுதான் என்பதால், இப்பெயரே எனக்குப் பிடித்து இருக்கிறது. என்ன, 'ஸ்' என்ற வடமொழி எழுத்து, பெயருக்கு முன்பாக வருவதால் வருத்தமுண்டு. இருந்தாலும் எனக்கு இப்பெயரே போதும்!கோ.பா.சாயீஸ்:என் பெயரே ஸ்டைலாக இருக்கிறது. இதன் பொருள், கடவுளின் மேல் அர்ப்பணிப்பு மிக்கவன் எனபதாம். மிகுந்த தேடலுக்குப் பின், என் அப்பா தேர்வு செய்த இப்பெயரே, எனக்குப் பொருத்தமானதாக நினைக்கிறேன். அதனால் இப்போதைக்கு, இப்பெயரை மாற்றம் செய்ய விருப்பம் இல்லை.நா. லட்சுமிபிரியா:இதுவே இரட்டைப் பெயர்கள். இன்னொரு பெயர் எதுக்கு? என் பெற்றோர் வைத்த பெயரே மிகவும் பிடித்திருக்கிறது. அதனால் பெயரை மாற்றும் எண்ணமெல்லாம் இல்லை.தே.வேதவர்ஷினி:எனக்கு, சிவனைப் பிடிக்கும் என்பதால் 'சிவாத்மிகா' என்ற பெயரில் கொள்ளை பிரியம். என் பெற்றோர் வைத்த பெயருக்கும் குறைவில்லை. என் பெயருக்கு நிறைந்த ஞானமும், வற்றாத செல்வமும் என பொருளாம். நியூமராலஜி எல்லாம் பார்த்து பெயர் மாற்றிக் கொள்வதில் விருப்பம் இல்லை. அதனால் வேதவர்ஷினியை இயற்பெயராகவும், 'சிவாத்மிகா'வை நானே வைத்துக் கொண்ட புனைப்பெயராகவும் தொடர்வேன்.