இளைய எழுத்தாளர்கள்: சவால்களை சாதித்த கதை
தான் படித்து வந்த பள்ளியில் இருந்து புதிய பள்ளிக்கு மாற்றப்படுகிறான் அன்ஷுமன் மோகன் (Anshuman Mohan). கொல்கத்தாவின் செயின்ட் சேவியர்ஸ் பள்ளி. ஒரு பக்கம் மகிழ்ச்சிதான். என்றாலும், புதிய சூழல், புதிய மாணவர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்வதில் இருந்த சிக்கல்கள், ஆசிரியர்களின் கண்டிப்பு ஆகியவை, அவன் மனத்தில் சற்றே கலக்கத்தை உருவாக்கின. இதைத் தொடர்ந்து அவன் ஒரு கதையை எழுதத் தொடங்கினான்.தன்னுடைய கதையில், அமன், ரோஹன், அங்கித், சமீர் ஆகிய நான்கு மாணவர்களை முக்கிய கதாபாத்திரங்களாக உருவாக்கினான். அவர்கள் சந்திக்கும் சவால்களின் வழியே கதையை நகர்த்திச் சென்றான். தொழில்நுட்பம், அது சார்ந்த கண்டுபிடிப்புகள், இணையம் ஆகியவை மாணவர்கள் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம்பற்றி விரிவாகப் பதிவு செய்தான். பாதி நாவலை எழுதி முடித்த பிறகே, இக்கதை புத்தகமாகப் பதிப்பிக்கும் அளவு தரத்துடன் இருப்பதாக 15 வயது அன்ஷுமனுக்குத் தோன்றியது. உருளைக்கிழங்குகளாக இருக்கும் குழந்தைகள், கல்வியின் வழியே எப்படி வறுக்கப்பட்டு எதிர்காலத்தைச் சமாளிக்கும் வகையிலான 'சிப்ஸ்'களாக மாற்றப்படுகின்றனர் என்பதுதான் கதை. சக மாணவர்கள் தரும் உளவியல் ரீதியிலான அழுத்தங்கள் எப்படி ஒரு மாணவனின் கல்வித்திறனைப் பாதிக்கிறது. அதிலிருந்து எப்படி அவன் மீண்டு வந்தான் என்று சொல்வதோடு, நமது கல்வி முறை, ஆசிரியர்கள் - மாணவர்கள் உறவு, அங்கு தோன்றும் சிக்கல்கள், அவற்றை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது போன்ற விஷயங்களும் கதையின் ஊடாக வந்து செல்கின்றன. பதிமூன்று வயது மாணவன் ஒருவன், தனது சூழல் குறித்து எழுதிய கதை, மற்றவர்களைக் கவர்ந்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை.உருளைக்கிழங்கு சிப்ஸைக் கண்ட அன்ஷுமன், தனது கதைக்கும் அதே பெயரை 'Potato Chips' வைக்க, 'ஹார்ப்பர் காலின்ஸ்' (Harper Collins) நிறுவனம் அந்த நாவலை 2010ஆம் ஆண்டில் வெளியிட்டது. உருளைக்கிழங்கு சிப்ஸ் அடைக்கப்பட்ட பொதிகளைப்போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட இப்புத்தகம், பதின்பருவத்தினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.- ஜி.சரண்