டிஜே நினைவு புகைப்படப் போட்டி (DJMPC) என்பது அதன் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தனவேலுவின் நினைவாக, கோயம்புத்தூர், லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் (LMW) ஆல் நடத்தப்படும் வருடாந்திர சர்வதேச புகைப்படப் போட்டியாகும்,
ஒவ்வொரு வருடமும் இரண்டு தலைப்புகள் வழங்கப்பட்டு அதன் கீழ் புகைப்படங்கள் பெறப்படும்.சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு எடுத்த புகைப்படக்கலைஞர்கள் கவுரவிக்கப்படுவர்,பத்து லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு “இயற்கையின் புதுமை மற்றும் காட்டுயிர்களின் உருவப்படங்கள் என இரு தலைப்புகளில் போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களது முயற்சியை பாராட்டி சான்றிதழ்களுடன் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இரண்டு பிரிவிலும் தேர்வு பட்டியலில் இடம் பெற்ற 10 பேருக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளன.
புகைப்பட கலையில் நிபுணத்துவம் பெற்ற டெல்லியை சேர்ந்த ராஜேஷ் பேடி, சிங்கப்பூரை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞர்களான ஜெயினி மரியா மற்றும் ஜெயபிரகாஷ் போஜன் உள்ளிட்டோர் அடங்கிய நடுவர் குழு அமைக்கப்பட்டு தேர்வுகள் நடந்தன. மருதாச்சலம், போட்டியின் ஆலோசகராக செயல்பட்டார். போட்டியின் நிர்வாகியாக விக்ரம் சத்யநாதன் தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றி பெற்றவற்களுக்கு, எல்.எம்.டபிள்யு குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜெயவர்த்தன வேலு அவரகள் பரிசுத்தொகை வழங்கி கௌரவித்தார்.இந்த ஆண்டு நடத்த புகைப்பட போட்டியில் உலகம் முழுவதும் 25 நாடுகளிலிருந்து 6464 படங்கள் இடம் பெற்றன 1538 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
டிஜே நினைவு புகைப்பட போட்டி 2024 புகைப்பட போட்டிக்கான பரிசளிப்பு விழா கோவையில் உள்ள கஸ்துாரி சீனிவாசன் கலாச்சார மையத்தில் நடைபெற்றது. புகைப்பட கண்காட்சி வரும் ஆகஸ்ட் 4, 2024 வரை நடைபெறும்.
-எல்.முருகராஜ்