UPDATED : மே 07, 2025 06:37 PM | ADDED : மே 07, 2025 06:33 PM
பெங்களூரு ஜெயநகர் பகுதியில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பட்டாளம்மன் கோவில் திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது.பட்டாளம்மன் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களுக்கு மிக முக்கியமான ஒரு குலதெய்வமாகும்.இவர் தாய் கடவுளாக பெரிதும் போற்றப்படுகிறார்,இவர் அருகில் உள்ள சித்தாபுரா கிராமத்தின் மகளாகவும், விவசாயத்தை,நாட்டை காக்கும் சக்தியாகவும் கருதப்படுகிறார்.சித்தாபுர கிராமத்தில் இருந்து பெங்களூருக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார், அப்படி வரும்போது பக்தர்கள் பல்வேறு வேடமிட்டு வந்தனர்.தங்கள் வேண்டுதலை இப்படி நிறைவேற்றிக் கொள்வதாக கூறினர்,தீய சக்தியை அழிக்கும் பட்டாளம்மனை பிரதிபலிப்பதாகவும் சிலர் குறிப்பிட்டனர், தங்களை அம்மன் போல அலங்கரித்து சிவப்பு மஞ்சள் உடையணிந்து, கையில் வேலும் வாளும் ஏந்தி ஆவேசமாக வீர தேவதையாக அவர்கள் வலம்வந்ததை பார்த்து பலரும் மெய்சிலிர்த்தனர். பலர் விரதமிருந்து பூக்குழியில் இறங்கியும் தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர். பராம்பரிய உணவான ராகி உணவு படைத்து பலருக்கும் வழங்கினர்.விழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டதால் பெங்களூரு மாநகரமே களைகட்டிக் காணப்பட்டது.-எல்.முருகராஜ்