உள்ளூர் செய்திகள்

ரியாத்தில் தமிழ் கலாசாரக் கழக இரத்ததான முகாம்

ரியாத்தில் தமிழ் கலாசாரக் கழகத்தின் இரத்ததான முகாம் KFMC இரத்த வங்கியில் சிறப்பாக நடைபெற்றது சவூதி அரேபியா ரியாத்தில், தமிழ்ப் பண்பாடு, மொழி மற்றும் சமூக நலன் சார்ந்த பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் தமிழ் கலாச்சாரக் கழகம் - TAMIL CULTURAL SOCIETY (TCS), ரியாத்தில் உள்ள கிங் ஃபஹத் மருத்துவ நகரத்தில் (KFMC)இல் மாபெரும் இரத்ததான முகாமை வெற்றிகரமாக நடத்தியது. அவசர காலங்களில் உயிர்களைக் காக்கும் உயரிய நோக்கத்துடன் நடத்திய இந்த முகாமில் மொத்தம் 112 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். அவர்களில் 72 பேர், இரத்தம் கொடுக்கும் தகுதியின் அடிப்படையில் இரத்த தானத்திற்கு தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தங்களது இரத்தத்தை கொடையாக வழங்கினர். இந்த நிகழ்வில் ரியாத் தமிழ் சங்கம்(RTS), இந்தியன் வெல்ஃபேர் ஃபோரம்(IWF) , RDCC கிரிக்கெட் குழு வீரர்கள், மற்றும் பிற முன்னணி ரியாத் சமூக அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு, மனிதநேயச் செயல்களில் தங்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சி முடிவில், கிங் ஃபஹத் மருத்துவ நகர இரத்த வங்கிக்குத் தமிழ் கலாச்சாரக் கழகம் உறுப்பினர்கள் கேடயம் வழங்கி, அவர்களது தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர். மேலும், ஆர்வத்துடன் பங்கேற்று ரத்தம் கொடுத்த ஒவ்வொரு கொடையாளருக்கும், அவர்களின் பங்களிப்பை மதித்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இத்தகைய மனிதநேய செயல்கள், நம் தமிழ் சமூகத்தின் ஒற்றுமையையும், உயரிய பண்பாட்டையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. - நமது செய்தியாளர் M Siraj


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !