அப்பா ராஜ்குமார் சமாதி அருகில் புனித் உடல் தகனம் செய்ய முடிவு - லட்சக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி
ADDED : 1438 days ago
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் நாளை(அக்.,30) ஞாயிறு அன்று முழு அரசு மரியாதையுடன் அவரது அப்பா ராஜ்குமார் சமாதி அருகே தகனம் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
46 வயதே ஆன புனித் ராஜ்குமார் நேற்று காலை ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணம் அடைந்தார்.
அவரது மரணம் இந்தியத் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவரது உடல் வைக்கப்பட்டுள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். திரையுலகப் பிரமுகர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
புனித் ராஜ்குமாரின் மூத்த மகள் வந்திதா ராஜ்குமார் அமெரிக்காவிலிருந்து இன்று மதியம் தான் டில்லி வந்தடைந்தார். அங்கிருந்து பெங்களூரு வர இரவு ஆகிவிடும். அதனால் நாளை(அக்., 31) ஞாயிறு அன்று இறுதிச் சடங்குகள் நடக்கின்றன.
இதனிடையே, புனித் மறைவு அதிர்ச்சியில் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், இருவர் மாரடைப்பில் மரணம் அடைந்ததாகவும் செய்திகள் வந்துள்ளன.