வாழ்நாள் பொக்கிஷம் - மைக் டைசனை எதிர்கொள்வது பற்றி விஜய் தேவரகொண்டா
உலகளவில் பிரபலமான குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இந்திய சினிமாவில் பன்மொழியில் தயாராகும் லைகர் படத்தில் அறிமுகமாகிறார். விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே மற்றும் கெட்டப் ஶ்ரீனு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். பூரி ஜெகன்நாத் இயக்குவதோடு சார்மி, கரண் ஜோகர், அபூர்வா மேத்தா ஆகியோருடன் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார்.
தற்போது இதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடக்கிறது. அங்கு விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் பங்குபெறும் மிக முக்கியமான காட்சிகளுக்கான படப்பிடிப்பை துவங்கி உள்ளனர். இதுப்பற்றி, ‛‛இரும்பு மனிதர் மைக் டைசனை நேருக்கு நேர் சந்தித்தபோது.... இந்த மனிதர் அன்பானவர். இவருடன் இணைந்திருக்கும் ஒவ்வொரு தருணத்தையும் பொக்கிஷமாக பாதுகாப்பேன். அதிலும் இந்த தருணம், வாழ்நாள் பொக்கிஷமாக இருக்கும்'' என விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.